வியாழன், 16 மே, 2019

சாவிகள்

சாவிகள்

===============================ருத்ரா




ஆயுள்

பதினாலு வயதுடன் முடிந்து போனது.

அப்போது நான்

பட்டாம்பூச்சியின் வண்ணங்களுடன்

முடிந்து விட்டேன்.

நள்ளிரவில் சுவர்க்கோழிகளுடன்

சினிமாக்கள் பார்த்துவிட்டேன்.

தண்ணீர்த்திவலைகளின்

வைர மூச்சுகளில்

"முற்றும்"எழுதிவிட்டேன்.

வானவில் ஏழுகலரில்

பஞ்சு மிட்டாய் சுருட்டிக்கொடுத்த‌

இனிப்பில்

கரைந்து விட்டேன்.

ரோஜா இதழ்களை

மென்று தின்று இந்த‌

கனவுகளின் ருசி பார்த்து

வாழ்க்கை அகராதியின் அட்டையையும்

தாண்டிய சொல்லின் வேருக்குள்

சமாதி ஆகிவிட்டேன்.

அவன் விழியோடு மோதியதில்

தெறித்த தீப்பொறிகளில்

நான் சாம்பல் ஆகி விட்டேன்.

இதற்கு காதல் என்று

நெஞ்சில் பச்சை குத்தியபிறகு

கடந்து செல்லும் நாட்கள் எல்லாம்

கல்யாணம் கெட்டி மேளம்

கூடு குஞ்சு குளுவான்கள்

இரை தேடல்

இரை ஆதல் எல்லாம் கூட‌

அந்த அகராதி சொல்கிறது

மரணம் மரணம் மரணம் என்று தான்.

சங்கராச்சாரியார் பாடியதும்

இப்போது இனிக்கிறது.

ஜனனம் மதுரம்.

மரணம் மதுரம்.

சிதை அடுக்கி படுத்துக்கொண்டு

கொள்ளிக்குடம் உடைத்து

தீயில் கரைவது தான் மரணமா?

வாழ்க்கை அடுப்பு ஊதும் முன்

நம் திரைச்சீலையில்

பிக்காசோவைக்கொண்டு

அந்த ஓவியங்கள்

பதியம் ஆகிவிட்ட பிறகு

சாம்பல் பூக்களில்

மகரந்தங்கள் தேடுகிறோம்.

பதினாலு வயதுக்குப்பிறகு

இந்த வயதுகள் எல்லாம்

சாவியாகிப்போன நெல்மணிகள்.

இருப்பினும் சாவி தேடுகிறோம்

வீடும் இல்லாமல்

வாசலும் இல்லாமல்

பூட்டிக்கிடக்கும் கதவுக்கு.



=======================================
12.02,2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக