வெள்ளி, 7 டிசம்பர், 2018

"ஏலியன்"

"ஏலியன்"
===========================================ருத்ரா


வாழ்க்கை என்றால் என்ன‌
என்று
தெரிந்து கொள்ள‌
ஒரு ஏலியன் கண்ணுக்குத்
தெரியாமல்
என்னுடன் வந்து
உட்கார்ந்து கொண்டது.
நான் சாப்பிடுவது..
சாப்பிடுவதற்காக‌
வேலை செய்வது...
வேலை கிடைப்பதற்காக‌
படிப்பது...
படிப்பதற்க்காக
கல்லூரி வனங்களில் திரிவது..
அப்படி திரியும்போது
நான் சில மின்னல் முகடுகளை
காண நேர்ந்தது...

என்று காரண காரிய‌
சங்கிலித்தொடரை அது
பின் பற்றி வந்தது.

நான் சந்தோஷமாக இருப்பது...
அதற்காக‌
ஒரு அகநானூற்று
உணர்வுக்காட்டில் நான் புகுந்தபோது
அதுவும் புகுந்தது.
அப்போது
நான் பார்த்த அவள் விழிகள்
என்னை சுருட்டிக்கொண்டன.
நான் இப்போது
எங்கே இருக்கிறேன்?
எனக்கே தெரியவில்லை.
பாவம்
அந்த ஏலியன்
என்னைத்
தேடிக்கொண்டிருக்கிறது.
என் காலடி ஒலி கேட்டு
என்னைத்தொடர்ந்து வந்து
கேட்டது.
"மூச்சு இறைக்க இறைக்க‌
ஓடிக்கொண்டிருக்கிறாயே?
இது தான் உன் வாழ்க்கையா?"

"இது வாழ்க்கை அல்ல.
வாழ்க்கைக்குள் ஒரு வாழ்க்கை."

"என்ன சொல்கிறாய்?"

இதை காதல் என்பார்கள்
என்று சொல்ல நினைத்தேன்.
அதைப் புரியவைப்பதற்கு
நான் ஒரு "அவதார்"படத்தை அல்லவா
போட்டுக்காட்ட வேண்டும்.

"உனக்கு என்ன வேண்டும்?"

அது கேட்டது.

"அந்த விழிகள் அந்த விழிகள்..
என்று கவிதையில் சொன்னேன்.."

அதற்குப்புரிந்ததா?
தெரியவில்லை.

அந்த ஏலியனின் கண்கள்
"ப்ளாக் ஹொல்கள்!"
எத்தனை ஆயிரம் பிரபஞ்சங்கள்
அதனுள் உறிஞ்சப்பட்டுள்ளனவோ?

"அது தான் உன்
வாழ்க்கைக்குள்.. வாழ்க்கைக்குள்..
...வாழ்க்கைக்குள்...வாழ்கையா?"

அது ஏதோ ஒரு
பாலிநாமியல் கணித
சூத்திரங்களைத் தான்
அப்படி சொல்கிறதோ?
அதுவும் தெரியவில்லை..

சற்று இரு.
நானோ விநாடிகளுக்குள்
இந்தாப்பிடி இதை.
இதைத்தானே தேடி தேடி ஓடினாய்.

"என் கையில் ரத்தப்பிழம்புடன்
அந்த விழிகள்.."

"அடே! கொலை காரா!
ஏலியா..ஏலியா.."

...................
"ஏண்டா!
என்ன இது பினாத்தல்..
எலி பெருச்சாளி என்று..
போதும்டா பகல் கனவு.
எழுந்திருடா"

அம்மா எழுப்பினாள்.

========================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக