ஞாயிறு, 23 டிசம்பர், 2018

சீதக்காதி (1)

சீதக்காதி (1)
======================================ருத்ரா


"செத்து செத்து விளையாடுவோமா?"
இப்படிக்கேட்பார்
முத்துக்காமாட்சி எனும் நகைச்சுவை நடிகர்
வடிவேலுவுடன் ஒரு படத்தில்.
அந்தக்காட்சிகளில்
திகில் சிரிப்பு சிந்தனை தத்துவம்
எல்லாம் கலந்து வந்து
நம் வயிற்றையும்
ஒரு கலக்கு கலக்கி சிரிக்க வைக்கும்.
ஆவியாக வருவது ஆவியாக நடிப்பது
என்றெல்லாம் அந்த ஆவிக்குத்தெரியுமா என்ன?
விஜயசேதுபதி
நடிப்பின் பலப்பல உத்திகளையெல்லாம்
பிய்த்துப்போட்டு
ஊறவைத்து கொதிக்கவைத்து
காய்ச்சி வடிகட்டி கொடுத்திருக்கிறார்.
ஆவிக்குள் இருக்கும் ஆன்மாவும்
ஆன்மாவுக்குள் இருக்கும் ஆவியும்
வசனம் பேசிக்கொண்டு
பாடல் வரிகளில்..இசையில்
ரத்தமும் சதையும் கண்ணீருமாய்
ஒரு அற்புதமான பாத்திரப்படைப்பில்
அதை விட அற்புதமான நடிப்பை
சிலிர்ப்புடம் நம்மீது பீய்ச்சி அடிக்கிறார்.
ஒரு நாடகக்கலைஞன்
வாழும்போதும் நடிக்கிறான்
செத்த பிறகும் நடிக்கிறான்.
அவனைப்பொறுத்தவரையில்
வாழ்க்கையை நடிப்பது
நடிப்பதை வாழ்வது
எனும்
இரண்டுக்கும் இடையிலான
அந்த மெல்லிய செங்கீற்று
என்கிற  "தின் ரெட் லைன்"
அவன் நெற்றிச்சுருக்கங்களாய்
உயிர்த்து நெளிகின்றன.
அய்யா என்று அவரை பார்ப்பதைக்காட்டிலும்
அய்யோ! இப்படியுமா?
ஒரு உணர்ச்சிக்குவியலுக்குள்
அவர் உறைந்து கிடப்பது?
என்று வியக்கத்தோன்றுகிறது!

=======================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக