"கையறு நிலை எனும் ஆயுதம்"
___________________________________________
நீ என்ன செய்து விட முடியும்?
இவர்கள் உன் மூளைக்குள்ளேயே
சொக்கப்பனை
கொளுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
"அவனைக்கொல்லு.
இவனைக்கொல்லு.
அப்போது தான் உன் ஜன்மம்
புண்ணிய ஜலம் தெளித்து
தூய்மையாக்கப்படும்.
சொர்க்க லோகத்தில்
பட்டா போட்டு கொடுக்கப்படும்."
பட்டாக்கத்திகளைத்
தூக்கிக்கொண்டு நீயும்
கூச்சல்களோடு
கிளம்பி விடுகிறாய்.
மனிதம்
மனித நேயம்
எல்லாம்
பூக்களாய் பிஞ்சுகளாய்
காய்களாய் கனிகளாய்
வெட்டி எறியப்படுகின்றன.
பூக்களின் மகரந்தங்களையும்
விட்டு வைக்காத வெறியுடன்
சாம்பல் ஆக்குகிறாய்.
உன்னையே பிணம் ஆக்கத்துடிக்கும்
உன்னைக்காப்பாற்ற
என்ன செய்து விட முடியும்
உன்னால்?
ஊடகங்கள் அந்த தீக்கு
எண்ணெய் வார்க்கலாம்.
அந்த அதர்மங்களுக்கு மட்டுமே
மெட்டு போட்டு
செய்திகளை காட்சிகளை
குவித்துத்தள்ளலாம்.
என்ன செய்து விடமுடியும்
உன்னால்?
அவர்களிடம் தான் எல்லாம்
இருக்கிறது.
ஆம்.எல்லாமே தான்.
உன்னிடம்
எதுவுமே இல்லை.
உன் அவலங்களையும்
ஆற்றாமைகளையும்
கண்ணீர் தளும்பும்
விழியோரங்களையும்
இதயம் உள்ளுக்குள்ளேயே
சுக்கு நூறாக
வெடித்துச்சிதறும்
கையறு நிலைகளையும் தவிர
என்ன இருக்கிறது
உன்னிடம்?
"கையறு நிலை எனும் ஆயுதம்"...
இது உன் அரணா? அவலமா?
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக