எந்த வேருக்கு
முளைப்பதில் ஆசையில்லையோ
அதைப்
பூமி தனது வளர்ப்புப்
பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்க
எந்த நதிக்கு
நடப்பதில் நாட்டமில்லையோ
நடக்க முடியும் என்ற நம்பிக்கைஇல்லையோ
அதை
நீர்க் குடும்பத்து எந்த அலையும வெறுத்து ஒதுக்கிவிடும்
எந்த உறக்கத்துக்கு
கனவு மீது அச்சமோ பகைமையோ
அதைப்
பகலின் தண்டனை மேடைக்கு
இரவே
கைகளில் விலங்கிட்டு
இழுத்துக்கொண்டு போகும்.
எந்தத் தவறு
விடைகளைப் பயிரிடுகிறதோ படைக்கிறதோ
எந்தத் தேர்வு
அறிவின்இருண்ட
கோணங்களால் உருவாக்கப்படுகிறதோ
அதை அகற்ற
உச்சநீதி மன்றத்திற்கு வழக்கை
வினாக்களே கொண்டுபோகும்.
எந்தப்
புன்னகை குழந்தையின்
பொன்னுதடுகள் வேண்டாமென
வெறுத்து வெளியேறுகிறதோ
அதைக்
கண்டித்து மலர்களின் மாநாடு
கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும்.
எந்தக்
எண்ணம் மனித மனத்துள்
இமையத்தை நிறுவுகிறதோ
கனிவின் கதவுகளைத் திறக்கிறதோ
அதை
ஆரத் தழுவவே வாழ்க்கை
கையில் பூச்செண்டோடு
வாசலில் காத்து நிற்கும்.
28-4-25பிற்பகல் 4-42
தலைப்பு - நியமங்கள்
______________________________________________________
அகத்தியன் கமண்டலத்தை
காக்கை உருட்டியதால்
காவிரி வந்ததென்று
கூப்பாடு போடும் கூட்டத்தில்
ஈரோடு எனும் கவிமண்ணில்
நீ பதியம் இடும்
"போன்ஸாய்"களில்
அறிவுப்பிழம்பின் கற்பனைகளின்
அடை மழையை தாங்கும்
குடைகள் ஏது இங்கே?
வெல்க! உன்
தமிழின் "வெண்கொற்றக்குடை!"
_____________________________________________
சொற்கீரன்.
(நியமங்கள் என்ற தலைப்பில் வந்த
ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதைக்கு
குடை பிடிக்கும் ஒரு கவிதை.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக