புதன், 16 ஏப்ரல், 2025

மரமும் இலைகளும்

 ஈரோடு தமிழன்பன் கவிதை

___________________________________


அன்றாடங்கள்

வரும்போது மாலைவரை

காக்கவைக்காமல்

வைகறையிலேயே வரவேற்போம்

அது கொண்டுவரும்

புதுப் புலரிப் பூவாசம்

பொழுதெல்லாம் தொடர்ந்திருக்கும்

கண்ணோரம்

நம்பிக்கை ததும்பும் அதன் பார்வையில்

வாழ்வைக் குளிப்பாட்டத்

தூக்கத்தை துடைத்துவிட்டு எழமாட்டோமா?

வானமும் பூமியும்

செதுக்கி அனுப்பும் அன்றாடத்தை

நிரப்ப நம்மிடம்

நெஞ்சம் நிறைந்த அன்பு வேண்டும்

நினைவு படர்ந்தஆசை வேண்டும்.

இறந்த நாள்களின்

எரிமேடைகளின்மேல் படுத்து எழுந்து

வருவதல்ல அன்றாடங்கள்

சுடச்சுடச்

சூரியக் கருவறையில் இருந்து

பிறந்து வருகின்றன.

ஓர் அன்றாடம்

நேற்றைய  நூறுகளை மாற்றி வைக்கும்

நாளைய நூறுகளுக்குள்

வெற்றிஊற்றுகள் திறந்து வைக்கும்

அன்றாடம் என்பது

காலை பகல் மாலை அந்தி இரவு

யாமம் அதிகாலை என்னும்

துண்டுப் பொழுதுகளின்தோரணமல்ல

காலம்

சுட்டெடுத்துப்பரிமாறும்

நேரங்களால் ஆன

நேர்த்தியுள்ள வாழ்க்கை முழுவிருந்து.

அன்றாடம்

முடியும்போது அதற்கொரு

ஒரு புன்முறுவல் கொடுத்து

ஒருபுன்முறுவல் வாங்கிக்கொள்வோம்

அடுத்த அன்றாடம்

வரும்முன்பே வாசலில் வந்து

கைகுலுக்கி வரவேற்று

ஒரு முத்தம் கொடுத்து

ஒரு முத்தம் வாங்கிக்கொளவோம்.

20-4-2025இரவு மணி10

தலைப்பு. அன்றாடங்கள்

____________________________________________________________________



முட்டுச்சந்து 

என்று ஒரு தலைப்பில்

எழுதிய ஒரு

கவிதைத்தொகுதிப் புத்தகம்

எங்கோ

அந்த "டீப் ஸ்பேஸ்"

எனும் " விண்வெளி ஆழியிலிருந்து"

கீழே விழுந்த‌து போல்

இருந்தது உங்கள் கவிதை.

மனிதன் தான் பிறந்திருக்கிறான்

மனிதனின் உளவியல்

இன்னும் பிறக்கவில்லை.

அவனுடைய முட்டுச்சந்துக்கு

இன்னும் தேசியக்கொடிகள் 

நட்டப்படவில்லை.

கோடி கோடி முனைகளைக்கொண்டு

பட்டை தீட்டப்பட்ட‌

சொல் வைரமாய் 

உங்கள் கவிதை நீட்டிய‌

இடமெல்லாம்

கிம்பர்லி சுரங்கங்கள்.

மனிதனுக்கு வேண்டுமானால்

புராணங்களின் இந்த‌

முட்டுச்சந்தே 

போதும் போதும் என்ற‌

சொர்க்கம் தான்.

மனிதனின் உள்ளம் பிசைந்த அறிவும்

அறிவுத்திரட்சியின் தெளிவும்

எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு

விழிகள் பூக்கும்.

அது வரை இந்த‌

"அன்றாடங்கள்"

சில்லறைகளை மாற்றி

குலுக்கி குலுக்கி

கொடுத்துக்கொண்டே இருக்கும்.

காலம் என்ற ஊசியின்

கூர் நூனியும் அதன்

காதற்ற கடைநுனியும்

சீரோவும் இன்ஃபினிடியுமாய்

இவர்களின் குவாண்டம் சிப்பில்

சோழிகள் குலுக்க்கிக்

கொண்டிருக்கட்டும்.

கவிதைகளின்

உங்கள் உவமை ஒளிக்கதிர்கள்

தினம் தினம் எங்களுக்கு

வெளிச்சச் சுரங்கத்தை வெட்டி வெட்டி

காட்டிக்கொண்டே இருக்கட்டும்!


__________________________________________________

சொற்கீரன்.






________________________________________________________________________

தலைப்பு
நாமும் பார்க்கலாம்-

15-4--2025 காலை 6-45
 ERODE THAMIZHANBAN.



சொற்கீரன் கவிதை


மேலிருந்து சூரியன்
கீழே இறங்கி வந்தான்.
ஈரோட்டு தமிழ் மண்ணின்
வேரோட்டுத் தடம் கண்டு
கண்டு கொண்டான்
ஒரு மனிதம் இங்கே
கோடி சூரியனாய்
கொந்தளிக்கின்றது என்று.
விஞ்ஞானிகள் எத்தனையோ
வீடியோக்கள் காட்டினர்...
என் தீ நரம்பு யாழ் மீட்டும்
அலை வரிசையில்
ஆயிரம் அறிகுறிகள்
காட்டினேன் என்று.
பாலைவனத்துப்
பாறை எண்ணெய் எரிபொருள்
ஆயிரம் ஆயிரம் கப்பல்களில்
பெரு மரணப்பேரழிவை
தினந்தோறும் கடல் ஊர்ந்து
சொல்கின்றதே
குறிப்பெடுத்துக் கொண்டீர்களா?
வர்த்தகத்தில் சூதாடும் அரசியலின்
பகடைக்காய்கள் எல்லாமே
நாளை உதிர்ந்து விழும்
மில்லியன்களின் கபாலங்கள் என்று
உணர்ந்து கொள்ளவில்லையா?
அந்த‌
ஈரோட்டுக்கவி வேந்தன் 
பெய்த‌
உவமைகளின் சொற்பிரளயம்
எல்லாமே
உண்மையிலும் உண்மை
அறிந்து கொள்வீரே!
சூரியப்புள்ளிகள் என்று
என் மூக்கின் நுனியருகே வந்து
படங்கள் எடுத்துக்குவித்து
என்ன பயன்?
பூமியின் உட்குறிப்பு புரியாமல்
அதை உள்ளே சுரண்டி
வெளியேயும் பிறாண்டி
பச்சை ஆடைகளையெல்லாம்
துகிலுரித்து
லாபம் குவிக்கும் 
பொருளாதாரத்தின் 
"ஹோலோ கிராஃபிக்"
புள்ளிவிவரப்படங்களை
காட்டி
உலகத்தின்
வறுமைத்தீயையும் 
தம் குளிர்பானங்கள் ஆக்கிப்
பருகும் 
அடாவடி தத்துவம் குறித்து
ஏன் இன்னும் இவர்கள்
அல்காரிதங்கள்
அவதாரங்கள் எதையும்
காட்டவில்லை?
_____________________________________________
சொற்கீரன்.

(வெயில் கொடுமை பற்றி
நாமும் பார்க்கலாம்‍ என்ற தலைப்பில்
15-4--2025  அன்று
ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய‌
கவிதை தந்த கருப்பொருளில்
உருவான கவிதை இது)



_________________________________________________________


மரமும் இலைகளும்
____________________________




சொற்கீரன்.


ஈரோடு தமிழன்பன் அவர்களே!
மரமும் இலைகளும்
தன் நிழல்களை
தரையில் விரித்து
செப்பு வைத்து விளையாடின.
ஆம்
அவை உன் கவிதைகள்.
அதில் மடல் விரித்த‌
பெண் மழலையின் 
புல்லாங்குழல்கள்
அன்பெனும் தேசிய கீதத்தை
ரவீந்திர நாத தாகூரின்
நோபல் பரிசு வரிகளுக்குள்
தேன் பாய்ச்சியது.
கற்பனையின் தேன்கூடுகள்
மொத்தமாய்
ஈரோடு தமிழன்பன்
பேனாவுள் அடைந்திருக்கும்
செய்தி 
உலகத்தின் மூச்சுத்தென்றலின்
தமிழ்க்கீற்றுகளில்
இழைந்திருக்கும் மின்காந்த அதிர்வுகளில்
அந்த நோபல் விருதாளுநர்களுக்கு
இன்னுமா எட்டவில்லை?
விண்வெளி பரந்த ஏடுகளே!
அந்த ஈரோட்டு ஏவுகணைகளில்
நம் சங்கத்தமிழ்
ஒளித்திரட்சி
ஒளித்து வைத்திருக்கும்
பெரு வெடிப்பு வெளிச்சங்கள்
எத்தனை எத்தனை 
யுகங்களுக்கு நீண்டிருக்கும்.
அந்த எட்டாத கற்பனையின்
பேனாத்திரி முனையும்
"ஓ! கவி வேந்தே!
உங்களிடம் உங்களிடம்
உங்களிடம் தான்.
____________________________________16.04.25
சொற்கீரன்











‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக