ஈரோடு தமிழன்பன் கவிதை
___________________________________
அன்றாடங்கள்
வரும்போது மாலைவரை
காக்கவைக்காமல்
வைகறையிலேயே வரவேற்போம்
அது கொண்டுவரும்
புதுப் புலரிப் பூவாசம்
பொழுதெல்லாம் தொடர்ந்திருக்கும்
கண்ணோரம்
நம்பிக்கை ததும்பும் அதன் பார்வையில்
வாழ்வைக் குளிப்பாட்டத்
தூக்கத்தை துடைத்துவிட்டு எழமாட்டோமா?
வானமும் பூமியும்
செதுக்கி அனுப்பும் அன்றாடத்தை
நிரப்ப நம்மிடம்
நெஞ்சம் நிறைந்த அன்பு வேண்டும்
நினைவு படர்ந்தஆசை வேண்டும்.
இறந்த நாள்களின்
எரிமேடைகளின்மேல் படுத்து எழுந்து
வருவதல்ல அன்றாடங்கள்
சுடச்சுடச்
சூரியக் கருவறையில் இருந்து
பிறந்து வருகின்றன.
ஓர் அன்றாடம்
நேற்றைய நூறுகளை மாற்றி வைக்கும்
நாளைய நூறுகளுக்குள்
வெற்றிஊற்றுகள் திறந்து வைக்கும்
அன்றாடம் என்பது
காலை பகல் மாலை அந்தி இரவு
யாமம் அதிகாலை என்னும்
துண்டுப் பொழுதுகளின்தோரணமல்ல
காலம்
சுட்டெடுத்துப்பரிமாறும்
நேரங்களால் ஆன
நேர்த்தியுள்ள வாழ்க்கை முழுவிருந்து.
அன்றாடம்
முடியும்போது அதற்கொரு
ஒரு புன்முறுவல் கொடுத்து
ஒருபுன்முறுவல் வாங்கிக்கொள்வோம்
அடுத்த அன்றாடம்
வரும்முன்பே வாசலில் வந்து
கைகுலுக்கி வரவேற்று
ஒரு முத்தம் கொடுத்து
ஒரு முத்தம் வாங்கிக்கொளவோம்.
20-4-2025இரவு மணி10
தலைப்பு. அன்றாடங்கள்
____________________________________________________________________
முட்டுச்சந்து
என்று ஒரு தலைப்பில்
எழுதிய ஒரு
கவிதைத்தொகுதிப் புத்தகம்
எங்கோ
அந்த "டீப் ஸ்பேஸ்"
எனும் " விண்வெளி ஆழியிலிருந்து"
கீழே விழுந்தது போல்
இருந்தது உங்கள் கவிதை.
மனிதன் தான் பிறந்திருக்கிறான்
மனிதனின் உளவியல்
இன்னும் பிறக்கவில்லை.
அவனுடைய முட்டுச்சந்துக்கு
இன்னும் தேசியக்கொடிகள்
நட்டப்படவில்லை.
கோடி கோடி முனைகளைக்கொண்டு
பட்டை தீட்டப்பட்ட
சொல் வைரமாய்
உங்கள் கவிதை நீட்டிய
இடமெல்லாம்
கிம்பர்லி சுரங்கங்கள்.
மனிதனுக்கு வேண்டுமானால்
புராணங்களின் இந்த
முட்டுச்சந்தே
போதும் போதும் என்ற
சொர்க்கம் தான்.
மனிதனின் உள்ளம் பிசைந்த அறிவும்
அறிவுத்திரட்சியின் தெளிவும்
எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு
விழிகள் பூக்கும்.
அது வரை இந்த
"அன்றாடங்கள்"
சில்லறைகளை மாற்றி
குலுக்கி குலுக்கி
கொடுத்துக்கொண்டே இருக்கும்.
காலம் என்ற ஊசியின்
கூர் நூனியும் அதன்
காதற்ற கடைநுனியும்
சீரோவும் இன்ஃபினிடியுமாய்
இவர்களின் குவாண்டம் சிப்பில்
சோழிகள் குலுக்க்கிக்
கொண்டிருக்கட்டும்.
கவிதைகளின்
உங்கள் உவமை ஒளிக்கதிர்கள்
தினம் தினம் எங்களுக்கு
வெளிச்சச் சுரங்கத்தை வெட்டி வெட்டி
காட்டிக்கொண்டே இருக்கட்டும்!
__________________________________________________
சொற்கீரன்.
________________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக