சீறியெழு
__________________________
போகிற போக்கில்
எதையாவது
சொல்லிவிட்டுப்போகலாம்.
எதையாவது
செய்து விட்டுப் போகலாம்.
எங்கே போவது?
எதற்கு போவது?
கடவுளைத்தேடியா?
வானம் மொட்டை அடித்துக்கொண்டு
எதற்கு இங்கே
உட்கார்ந்து கொண்டிருக்கிறது?
அந்த நட்சத்திரங்களையெல்லாம்
சோறு சமைத்து தின்றுவிட்டுமா
இதன் பசி அடங்கவில்லை.
கடவுள் சொன்ன வேதங்களையெல்லாம்
சுண்டல் வைத்து கும்பிட்டாச்சு.
எதற்கு இந்த சில்லறை சப்தங்கள்?
பாஷ்யங்களும் சூத்திரங்களும்
இறைந்து கிடக்கின்றன.
இந்த சில்லுக்குப்பைகளில்
எதைச் செதுக்க முடியும்?
மனம் நொதித்து நுரைப்பதெல்லாம்
எந்தக்கதவையும் திறந்து விட்ப்போவதில்லை.
சன்னல்கள் திறந்தே கிடக்கின்றன.
எட்டிப்பார்த்து எட்டிப்பார்த்து
ஒரு காக்கை கூட வந்து
இங்கே குசலம் விசாரிக்க வரவில்லை.
தேவன் வருவாரா?
எதற்கு இவ்வளவு அக்கறை?
கை வசம் சிலுவைகள் தயாரா?
மனிதா!
உனக்குத்தெரியாமலேயே
நீ
எல்லாவற்றையும் படைத்திருக்கிறாய்.
இன்று எல்லா தீர்வுகளும்
உன் விரல் சொடுக்கல்களில்.
உன் நிழல் விழுந்தது கண்டு
ஏன் பதறிப்போனாய்?
எதற்கு நடுங்குகிறாய்?
உன் அசைவுகளும் நகர்வுகளுமா
உனக்கு பூதங்கள்?
ஆம்! உனக்குத்தேவை
மீண்டும் உன் சிந்தனை.
மீண்டும் உன் அறிவு கூர் தீட்டப்படும்
தருணங்கள் தேவை.
நீ நடக்கும் உன் பாதையில்
ஏன் இத்தனைப் பொய்க்காடுகள்?
உன்னையே புதைக்கவா
இத்தனை மதங்களையும்
பிளவுபாடுகளையும்
உண்டாக்கினாய்.
உன் பாதையில் தான்
மனிதம் மலர்ச்சிகண்ட சுவடுகள் உள்ளன.
வன்மமும் வக்கிரமும் கொண்டு
உன்னைக் குறுக்கிடும்
குழப்பங்களை அடித்து நொறுக்கு.
நீதி போல் மயங்கித்தெரியும்
அநீதிகளை இனம் கண்டு
வேரறுத்துக்கொண்டு வெளியேறு.
உன் மூளையை எல்லாம்
முடமாக்கி விட்ட புரட்டு வாதங்களை
தூக்கியெறி.
உன் சிந்தனக் விலங்குகளை
உடைத்துக்கொண்டு
எகிறி வா!
எழுச்சி கொண்டு வா!
உன் புதிய வரலாறு தான்
இனி உன் கிழக்குத்திசை.
மற்ற உழக்கு ஆழாக்கு புராணங்கள் எல்லம்
வெறும் கொட்டாங்கச்சி தீர்த்தங்கள்.
அவை அல்ல உன் கடல்கள்.
அவை அல்ல உன் அலைகள்.
சீறியெழு!
நீதி வெல்லும்.
முனைந்து நட!
__________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக