பேனா மரம்!
___________________________________
உயர்வெப்ப அழுத்தத் தாக்குதலான
கோடைக் காலம்
பூமியின்
வியர்வைத் தொகுப்பிலும்
வெந்தணல் மூட்டிவிட்டது
பாதங்கள்
கொப்பளித்துப் புண்ணாகிவிட்டதால்
நடக்க முடியாத நதிகள்
கடக்க வேறு வழியின்றிச்
சுடு மூச்சுக் காற்றின் கைகளை
இறுகப் பற்றியபடி தடுமாறுகின்றன.
கூடுநிரம்பக்
கோடை தொட்டுக் குலைந்த பாட்டின்
எலும்புக் குவியல்,
குயில்களின் ஊமை ஒப்பாரி
எவர் செவிகளில் விழும்?
கோடைக்கு
நுங்கு வைத்திருந்த பதில்கள்
உள்ளேயே வெந்து மடிந்துவிட்டன.
வினாவெடிகள்
விசும்பைக்கிழித்துக்கொண்டு
கீழே விழுகின்றன.
பூமியே
வெப்பமயமாகி முதலுக்கே
வேட்டு வைத்தாயிற்று
நரம்புகள் அறுந்த நேரங்களில்
இசைகள் வெடிக்கத் தொடங்கிவிட்டன
முதற் பொருள்களான
நிலத்தை,பொழுதை நிர்மூலமாக்கி
அழித்தோம்
பூமி கெட்டதும் காலம் கெட்டதும்
புத்தியில் படாமலே
வளர்ந்து விட்டோம் வாழ்ந்துவிட்டோம்
இனிமேல் இல்லை
கார்,கூதிர்ப் பருவங்கள்
இனிமேல் இல்லை
முன்பனி,பின்பனிப் பருவங்கள்
இனிமேல் இல்லை
இளவேனில்,முதுவேனில் பருவங்கள். இனிமேல்
இருக்கும் பருவங்களுக்கு
இனிமேல்வரும்
தொல்காப்பியரே பெயர் சூட்டுவார்.
இருந்தால்
நாமும் பார்க்கலாம்.
நாமும் பார்க்கலாம்-தலைப்பு
15-4--2025 காலை 6-45
_____________________________________________________________________________
ஈரோடு தமிழன்பன் அவர்களே!
சுடச்சுட ஒரு
பக்கோடாப்பொட்டலமாய்
உறவும் அன்பும்
சுவையூட்ட
பிரம்பும் புத்தகமும்
உலகை
பக்கம் பக்கமாய்
விரித்துக்காட்ட
இந்த பிரபஞ்சமே
ஒரு தூசுடுடா எனக்கு
என்று
அன்பு மழலைக்கு
கடல்கள் பிளந்து
அன்னை
வழி காட்ட
வாழ்க்கை எனும்
கவிதையின் முதல் வரி
எழுதிக்காட்டிய
எங்கள் பேனா ஒளி மரமே!
மிக்க தோர் களி கொண்டோம்.
அது உங்களுக்கு பேனா.
எங்களுக்கு உளி
தமிழின் சிற்பம் காட்டும் ஒளி.
___________________________________
சொற்கீரன்.
(ஈரோடு தமிழன்பன் அவர்கள்
13.04.25 ல் எழுதிய
கவிதை பற்றிய கவிதை.)___________________________________________________________
தொட்டில் நாள்களில்
காய்ச்சல் சளியென்றால்
அம்மா மடியே குணமாக்கும்
கசப்பில்லாத
மருந்துக்கூடம்
அரிச்சுவடிக் காலத்தில்
ஆசிரியப் பிரம்பின்
அடையாளம் முதுகில் கண்டதும்
ஆசிரியர் மீதான
சித்தப்பாவின்செந்தணல் சினமே தேம்பும்
நேரத்திற்குத் தீர்வு
கணக்குப் பாடத்தில்
மதிப்பெண்களின் மழைமறைவுப்
பிரதேசத்தில் நான்
ஒளிந்துகொண்டிருந்த காலத்தில்
தனது
மளிகைக் கடைப்பேரீச்சம் பழத்தின் சுளையில்
பெரியப்பா
தேனூற்றி வைத்திருக்கும்
ஆறுதல்
கொரில்லாத்
தாக்குதல் நடத்திப் பள்ளிக்குக்
கடத்திப்போகத்
தலைமை ஆசிரியர் அனுப்பிய
படையோடு நான்
மோதிக்கொண்டிருந்த
ஒருநாள்,
என் கைரேகை பார்த்து நீ
நல்லபடியா வருவாய் என்று சொன்ன
ஓய்வுபெற்ற ஆசிரியர்
.சங்கரம்பிள்ளை அப்போது
அப்பக்கமாக வந்தவர்
"டேய் டேய்! அவனை விடுங்கடா" என்று
என்னைப் பற்றிய கைகளில்
இருந்தது விடுதலை.
அப்பா
கை ஓங்கி வந்தபோதும்
அம்மா
வழிதெரியாமல் தவித்துநின்றபோதும்
முருகேசா!
ஏன் குழந்தையை இப்படிப் போட்டுமிரட்டுகிறாய்
என்று குறுக்கே வந்து
வாரி எடுத்துக்கொண்ட காஞ்சிக்கோயில் அத்தை கைகளில்
இருந்தன எனக்குப்
பாதுகாப்பும் பக்கோடாப் பொட்டலமும்.
13-04-2025 காலை 5-50
தலைப்பு:நினைவுமீட்சியில்
THAMIZANBAN
05.04.2025
______________________________________________________________
வானம்
என்ன செய்ய நினைக்கும்.
வந்துநிற்கும்
வைகறையின் முகத்தைக்
கண்டவுடன்?
தொட்டில்
குழந்தை முகத்தைத் தொட்ட
காற்று நகரநகரத் தாலாட்டு
உறக்கம் கலைந்து எழுமா?
காத்திருக்கும்
பூக்களின்சிரிப்பு செடிக்கு வருமுன்
பிறவாக் குழந்தை உதடுகளில்
குடியிருக்கப் போய்விடுமா?
அதிசயம்
ஆயிரம் படைத்த மனிதனை விட
அதிசயம் அந்த மனிதனை
இயற்கை
படைத்த அதிசயமல்லவா?
அழுகை
பின்னாலேயே ஓடுகிற மனிதன்
வாழ்க்கையின் கைகளில் இருக்கும்
புன்னகைக் கொத்துகளை
வாங்கிக்கொள்ளவே மாட்டானா?
பகல்
எந்த நாளில் கண்களை மூடி
உறங்கும் என்று கேட்டு
இரவு
வருமெனில் பூமி, போதும் என்று
சுழற்சியை நிறுத்தி விடாதா?
5-4-2025 காலை 05-05
தலைப்பு
பூக்களின்சிரிப்பும்
பூமியின்சுழற்சியும்
__________________________________________________________________________
ERODU THAMIZHANBAN !
தமிழ்முகத்தில்
வெற்றிமலர் புன்னகைக்கிறது
தமிழ்மனத்தில்
ஆயிரம் விளக்குகள் ஏற்றி வைக்க
வானம்
கடல்களின்
அலைகளில் வாகைப்
பரணிப் பாடல்கள் முழங்குகின்றன.
தமிழ்நாட்டுச்
சட்டப்பேரவைக்கு எதிராகச்.
சாட்டை தூக்கியவன்
உச்ச நீதிமன்றத்தால் தூக்கி எறியப்பட்ட
வரலாற்றை
வைகறை
கண்ணிமைக்காமல்
படிக்கிறது
அந்தி
ஸ்டாலினுக்கு அணிவிக்க
செவ்வாடை ஏந்தி வருகிறது.
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலம்
திக்குகள் இதயத்தில் வெற்றிக்
கல்வெட்டுகள்
செதுக்கும்
திருவிழாக் காலம் !
மக்களாட்சியின்
மாபெரும் வெற்றிக்குப்
பச்சைக் கொடி அசைத்து
உச்சநீதிமன்றம் இசைவு தந்துள்ளது
மக்கள் அரசுக்கு
மரியாதை முரசுகொட்டியுள்ளது.
தாமதிக்காமல்--
கிடப்பில் ஆளுநர் போட்டிருந்த
தமிழகச் சட்டப்பேரவையின்
சட்டமுன்வரைவுகளை
உச்சநீதிமன்ற மே சட்டென்று
சட்டமாக்கி உள்ளது.
தள்ளிப் போகும் நீதி
தவிர்க்கப்பட்ட நீதியென அறிவதல்லவா
நீதித் தராசின் அடையாளம்!
தமிழகச் சட்டப் பேரவையின்
உச்சி குளிர மலர்கள் தூவிய
உச்சநீதிமன்றம்
முட்டுக் கட்டை மண்டைமேல்
என்ன கொட்டியதோ
எவரே அறிவார்!
8-4-25 பிற்பகல் மணி 3
தலைப்பு -திருவிழாக்காலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக