வெள்ளி, 18 ஏப்ரல், 2025

APPENDIX

 APPENDIX 

சொற்கீரன்.



__________________________________________________________________________________

ஓட்டமும் நடையுமாய் இருக்கும்

வாழ்க்கை

சூட்டுகிறது வெற்றி ஒளிக்

கிரீடத்தை!

_______________________________________________________________________________



எல்லா நாவல்களுமா சூடாக வாசிக்கப்படுகின்றன? பதிப்பிட்டவுடனேயே பழைய பேப்பர் கடைக்கார்கள் அள்ளிக்கொண்டு போகும் அவல்ங்கள் இங்கே நிறைய உண்டு.ந‌றுக்கென்று நாலு வரியை கிறுக்கி விட்டு

குட்டு வைக்கும் எழுத்துக்கள் மண்டையின் அடி ஆழம் வரை குடைச்சல் புரியும் எழுத்துக்களும் உண்டு.

முகம் தெரியாத அவர்கள் எந்த பிரபல வெளிச்சமும் இன்றி இருட்டுக்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கும்

அந்த முகம் தெரியாத "அநியாயத்தைப்பற்றி"அலட்டிக்கொள்ள இங்கு எவரும் இல்லை.


________________________________________________________________________________

ஒளி என்றேன்

ஒளிந்து கொண்டாய்.

இருட்டா நீ

என்றேன்.

வெடித்து சிரித்தாய்.

சரி போ ஒழி..

யார் தான் நீ?

என்ன தான் நீ?

கேள்வியும் கேள்வியுமே

இங்கு  

எதிரொலித்துக் 

கொண்டிருகிறது.

______________________________________________________________________

காதலின் 
இனிய துன்பங்களையோ
துன்பியல் இனிப்புகளையோ
சிறு குழந்தைகள் கையில் 
இருக்கும்
லாலி பாப் போல‌
இருந்து கொண்டே இருக்க‌
என்ன செய்ய வேண்டும்?
முடியுமானால் 
இதைத்தான் செய்யவேண்டும்.
"இருபதுகளுக்கு"ப்பிறகு
எண்ணுவதை நீ
நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஆம்.
உன் வயதுகளைத்தான்.
__________________________________________


அண்ணல் அம்பேத்கார்.
_____________________________________

மதம் என்ற நச்சு மரத்தின்
மூடப்பூக்களின் காடுகளே.
சாத்திரங்கள்.
வகையாய் வர்ணமாய்
சாதியாய் வந்தது
மக்களிடையே ஓர்
வாளாய் வந்தது.
வாளாய் இருக்க வில்லை அது
மனித மாண்புதனை
வெட்டிச்சாய்த்தது.
மனிதனுக்கு மனிதன்
பிளவு பாடுகள் 
வகுத்து வைத்து
இதுவே கடவுள் நீதி
இதுவே வாழ்வு நீதி
என்று 
கதைகள் பேசியது.
பிரம்மன் பிள்ளைகள் 
சில பேர்.
வேதம் ஓதுவர்
பேதம் பேசுவர்
அதுவே காலமெலாம்
அறம் ஆகும் 
என்பர் எங்கும்.
மன்னன் அவர் வழி.
மக்கள் அவர் வழி.
மானிடம் அங்கு
வழி இழந்து
ஒளியும் இழந்தது.
இதை
அடித்து நொறுக்கி
தவிடு பொடியாக்கி
விடியல் தந்த‌
அறிவின் ஒளியே
நம் அம்பேத்கார்.
மனிதமே மக்கள் ஆகி
சமம் ஆன சமூகநீதி
எழுத்தாய் வடிவாய்
நிமிர்ந்து உரைக்கும்
அரசியல் அமைப்பின்
சட்டப்புத்தகம்
தந்தவரே நம்
அம்பேத்கார்.

___________________________________________________________________________________


தலைப்பு
நாமும் பார்க்கலாம்-

15-4--2025 காலை 6-45
 ERODE THAMIZHANBAN.



சொற்கீரன் கவிதை


மேலிருந்து சூரியன்
கீழே இறங்கி வந்தான்.
ஈரோட்டு தமிழ் மண்ணின்
வேரோட்டுத் தடம் கண்டு
கண்டு கொண்டான்
ஒரு மனிதம் இங்கே
கோடி சூரியனாய்
கொந்தளிக்கின்றது என்று.
விஞ்ஞானிகள் எத்தனையோ
வீடியோக்கள் காட்டினர்...
என் தீ நரம்பு யாழ் மீட்டும்
அலை வரிசையில்
ஆயிரம் அறிகுறிகள்
காட்டினேன் என்று.
பாலைவனத்துப்
பாறை எண்ணெய் எரிபொருள்
ஆயிரம் ஆயிரம் கப்பல்களில்
பெரு மரணப்பேரழிவை
தினந்தோறும் கடல் ஊர்ந்து
சொல்கின்றதே
குறிப்பெடுத்துக் கொண்டீர்களா?
வர்த்தகத்தில் சூதாடும் அரசியலின்
பகடைக்காய்கள் எல்லாமே
நாளை உதிர்ந்து விழும்
மில்லியன்களின் கபாலங்கள் என்று
உணர்ந்து கொள்ளவில்லையா?
அந்த‌
ஈரோட்டுக்கவி வேந்தன் 
பெய்த‌
உவமைகளின் சொற்பிரளயம்
எல்லாமே
உண்மையிலும் உண்மை
அறிந்து கொள்வீரே!
சூரியப்புள்ளிகள் என்று
என் மூக்கின் நுனியருகே வந்து
படங்கள் எடுத்துக்குவித்து
என்ன பயன்?
பூமியின் உட்குறிப்பு புரியாமல்
அதை உள்ளே சுரண்டி
வெளியேயும் பிறாண்டி
பச்சை ஆடைகளையெல்லாம்
துகிலுரித்து
லாபம் குவிக்கும் 
பொருளாதாரத்தின் 
"ஹோலோ கிராஃபிக்"
புள்ளிவிவரப்படங்களை
காட்டி
உலகத்தின்
வறுமைத்தீயையும் 
தம் குளிர்பானங்கள் ஆக்கிப்
பருகும் 
அடாவடி தத்துவம் குறித்து
ஏன் இன்னும் இவர்கள்
அல்காரிதங்கள்
அவதாரங்கள் எதையும்
காட்டவில்லை?
_____________________________________________
சொற்கீரன்.

(வெயில் கொடுமை பற்றி
நாமும் பார்க்கலாம்‍ என்ற தலைப்பில்
15-4--2025  அன்று
ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய‌
கவிதை தந்த கருப்பொருளில்
உருவான கவிதை இது)



_________________________________________________________

சொற்கீரன்.


ஈரோடு தமிழன்பன் அவர்களே!
மரமும் இலைகளும்
தன் நிழல்களை
தரையில் விரித்து
செப்பு வைத்து விளையாடின.
ஆம்
அவை உன் கவிதைகள்.
அதில் மடல் விரித்த‌
பெண் மழலையின் 
புல்லாங்குழல்கள்
அன்பெனும் தேசிய கீதத்தை
ரவீந்திர நாத தாகூரின்
நோபல் பரிசு வரிகளுக்குள்
தேன் பாய்ச்சியது.
கற்பனையின் தேன்கூடுகள்
மொத்தமாய்
ஈரோடு தமிழன்பன்
பேனாவுள் அடைந்திருக்கும்
செய்தி 
உலகத்தின் மூச்சுத்தென்றலின்
தமிழ்க்கீற்றுகளில்
இழைந்திருக்கும் மின்காந்த அதிர்வுகளில்
அந்த நோபல் விருதாளுநர்களுக்கு
இன்னுமா எட்டவில்லை?
விண்வெளி பரந்த ஏடுகளே!
அந்த ஈரோட்டு ஏவுகணைகளில்
நம் சங்கத்தமிழ்
ஒளித்திரட்சி
ஒளித்து வைத்திருக்கும்
பெரு வெடிப்பு வெளிச்சங்கள்
எத்தனை எத்தனை 
யுகங்களுக்கு நீண்டிருக்கும்.
அந்த எட்டாத கற்பனையின்
பேனாத்திரி முனையும்
"ஓ! கவி வேந்தே!
உங்களிடம் உங்களிடம்
உங்களிடம் தான்.
____________________________________16.04.25
சொற்கீரன்


______________________________________________________________________

18.04.2025


"தடம் புரண்ட வரலாறு தான் நம் சுதந்திர வரலாறு என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.இது அடிப்படையில் "நான்கு வர்ண"க்கொடியில் தான் தேசியக்கொடியாக ஏற்றப்பட்டது.ஆனால் மூவர்ணக்கொடியாக  நேற்று வரை
நம்மிடம் காட்டப்பட்டுக்கொண்டிருந்தது."போதும்டா உங்கள் ஜனநாய‌கமும் நீங்களும்" என்று அந்த நான்கு வர்ண சர்வாதிகாரம் இன்று சுநாமி வெள்ளம் போல் நம் பாராளுமன்றம் புகுந்து நம்மை மூழ்கடித்துக் கொண்டிருப்பதன் வெளிப்பாடுகளே இன்றைய நிகழ்ச்சிகள்.இதையெல்லாம் பார்த்து அண்டை நாடுகள் ஏதோ "தொலக்காட்சி" நிகழ்ச்சிகள் என்று ஒதுங்கித்தான்
இருப்பார்கள். மூழ்கியவர்களே மூண்டெழுந்து எதிர் நீச்சல்
அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. "அப்படி மூழ்குவது தான் நம் சொர்க்கம்"என்று மூழ்கிக்கொண்டிருக்கும்  மக்களுக்கு உண்மைகள் புரியாத வரை இந்த அரசியலமைப்பு ஷரத்துக்களை வைத்து "கொலு" நடத்தும்
"கோரக்காட்சிகளே" மிச்சம்.

___________________________________________________________________________________
யாருடைய
உடையாக் கனவுகள்
சிலுவை மரங்களோடு
உரையாடப் புறப்பட்டு வரும்..?...
யாருடைய
தயக்கங்கள் ஒவ்வோர் அரும்பினுள்ளும்
நேரம் பார்த்துக் காத்திருக்கும்?.....
யாருடைய
கலவரங்கள் ஒவ்வோர் இண்டம் புதருக்குள்ளும்
பதுங்கியிருக்கும்.?.....
யாருடைய
முடிவுகள் ஒவ்வொரு விதைக்குள்ளும்
தவிக்கும் வாழ்வைக் கரம்பற்றும்.?.....
யாருடைய
வினாக்களின் வெப்பத்தால் ரோஜாக்களின்
விடைகள் சிவந்து போயிருக்கும்?.....
யாருடைய
அரவணைப்பு முகை அவிழா முல்லைக்குள்
முறுவல்கள் கோத்துவைக்கும்..?.....
யாருடைய
கண்ணீர் எருக்கம் பூக்கள் இதயத்திற்குள்
தன்னம்பிக்கை விளக்கேற்றும்..?.........
யாருடைய
வெற்றி ஒரு செடியின் முதல் தளிருக்குத்
வைரமோதிரம் அணிவிக்கும்..?.......
யாருடைய
புன்னகை ஒரு மலரமுடியா
அரளிக்கு
ஆதரவாய்ப் புறப்பட்டுப் போகும்..?....
யாருடைய
தூக்கங்கள்
தொட்டில் பருவத்தைவிற்க
ஆயுள் முழுக்க அலைந்துகொண்டிருக்கும்?..
?18-05-2025காலை 6-25
தலைப்பு-யாருடைய தூக்கம்?.....


______________________________________________________


யாருடைய ...?
என்று ஆரம்பித்து...
இந்த நீள மலைப்பாம்பு
எத்தனை ஆயிரம் மைல்ககளின்
தூரத்தை விழுங்கிக்கொண்டு
"சொல் தொகை" எனும்
கலித்தொகையை இங்கு எழுதிக்கொண்டு போகிறது? அத்தனையும் இலக்கியம் செறித்த இலக்கணம். அல்லது இலக்கணம் உண்ணும் இலக்கியம். ஒரு பூவின் சிலிர்த்த‌ பூ மயிருக்கு கூட‌ வைர மோதிரமா? அந்த தொட்டில் தூக்க‌த்தைகூட‌ அண்டம் கொள்ளாத‌ விலைக்கு விற்று விட்டும் சிந்தனை அடர்த்தியின் வரிகளில் எல்லாம் ஒரு "மலை படு கடாம்" மெல்லுயிர்ச்சிரிப்பின் முத்துச்சிப்பிகளாய் இடறுகிறது வழியெல்லாம் மணிக்கப்பரல்களாய்! இந்த காலத்தின் நீள் விழி உன் தமிழின் இமைகளுக்குள் இன்பச்சுரங்கம் ஒன்றை வெட்டிக்கொண்டே அல்லவா போகிறது. அந்த குகையின் "அடுத்த வாசலின்" வெளிச்சம் தரும் வாசத்தை உன் எழுத்து மூச்சுகளே பதியம் இட்டு இட்டு சென்று கொண்டிருக்கிறது. ஈரோடு எனும் சிறு அடைமொழிக்குள் எத்தனை ஆயிரம் பிரபஞ்சங்களை அடைத்துப்பார்த்தாலும் அடங்காத தமிழ் ஆழியே! எங்கள் "தமிழன்பன்" எனும் சொல் துளியில் முடிந்து கொள்ளப்பட முடியாத‌ கற்பனைப்பிழம்பின் பொற்கிழியே! வியப்பதற்கும் முடியாத‌ பெரு வியப்பு நீ! ______________________________________________ சொற்கீரன் (18-05-2025 ல் யாருடைய தூக்கம்? என்ற தலைப்பில் எழுதிய‌ ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய கவிதை வெப்பம் தந்த குளிரில் வந்தது இந்த எனது கவிதை.) ______________________________________
_











‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக