புதன், 16 ஏப்ரல், 2025

தீ நரம்பு


 தீ நரம்பு 

_________________________________


மேலிருந்து சூரியன்.

கீழே இறங்கி வந்தான்.

ஈரோட்டு தமிழ் மண்ணின்
வேரோட்டுத் தடம் கண்டு
கண்டு கொண்டான்
ஒரு மனிதம் இங்கே
கோடி சூரியனாய்
கொந்தளிக்கின்றது என்று.
விஞ்ஞானிகள் எத்தனையோ
வீடியோக்கள் காட்டினர்...
என் தீ நரம்பு யாழ் மீட்டும்
அலை வரிசையில்
ஆயிரம் அறிகுறிகள்
காட்டினேன் என்று.
பாலைவனத்துப்
பாறை எண்ணெய் எரிபொருள்
ஆயிரம் ஆயிரம் கப்பல்களில்
பெரு மரணப்பேரழிவை
தினந்தோறும் கடல் ஊர்ந்து
சொல்கின்றதே
குறிப்பெடுத்துக் கொண்டீர்களா?
வர்த்தகத்தில் சூதாடும் அரசியலின்
பகடைக்காய்கள் எல்லாமே
நாளை உதிர்ந்து விழும்
மில்லியன்களின் கபாலங்கள் என்று
உணர்ந்து கொள்ளவில்லையா?
அந்த‌
ஈரோட்டுக்கவி வேந்தன் 
பெய்த‌
உவமைகளின் சொற்பிரளயம்
எல்லாமே
உண்மையிலும் உண்மை
அறிந்து கொள்வீரே!
சூரியப்புள்ளிகள் என்று
என் மூக்கின் நுனியருகே வந்து
படங்கள் எடுத்துக்குவித்து
என்ன பயன்?
பூமியின் உட்குறிப்பு புரியாமல்
அதை உள்ளே சுரண்டி
வெளியேயும் பிறாண்டி
பச்சை ஆடைகளையெல்லாம்
துகிலுரித்து
லாபம் குவிக்கும் 
பொருளாதாரத்தின் 
"ஹோலோ கிராஃபிக்"
புள்ளிவிவரப்படங்களை
காட்டி
உலகத்தின்
வறுமைத்தீயையும் 
தம் குளிர்பானங்கள் ஆக்கிப்
பருகும் 
அடாவடி தத்துவம் குறித்து
ஏன் இன்னும் இவர்கள்
அல்காரிதங்கள்
அவதாரங்கள் எதையும்
காட்டவில்லை?
_____________________________________________
சொற்கீரன்.

(வெயில் கொடுமை பற்றி
நாமும் பார்க்கலாம்‍ என்ற தலைப்பில்
15-4--2025  அன்று
ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய‌
கவிதை தந்த கருப்பொருளில்
உருவான கவிதை இது)









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக