சனி, 19 ஏப்ரல், 2025

"இரைவம்"

 

"இரைவம்"

_______________________________________


நான் தான் கடவுள் என்று

ஒருவன் 

இறங்கி வந்தான்.

மனிதம் என்றால் என்ன‌

என்று வகுப்புகள் எடுத்தான்.

மனிதனுக்காக‌

மனிதன் துன்புறுவதே

இறைவம் எனும் 

பெரிய பாடம் என்று 

சொன்னான்.

மனிதன் தனக்காக‌

இன்னொரு மனிதனை

துன்புறுத்துவது தான்..

மிருக குணம் என்று கூட‌

அதை கொச்சை படுத்த முடியாது..

அது தான்

மனிதன் தனக்கு

இறைவம் என்பதை 

கண்டுபிடித்துக்கொண்டான்

என்று சொல்லலாம்.

மிருகமாக இருக்கும்போது

இரைக்காக‌

இன்னொரு மிருகம் 

துன்புறுத்தப்படுவது

இயற்கையே.

மனிதம் பரிணாமம் ஆன பிறகு

இன்னொரு மனிதனை

மனிதன் துன்புறுத்துவது

இயற்கைக்கு எதிரானது.

இதை தடுப்பதற்கு

அடிக்கடி அடிக்கடி 

சொல்லப்படுவதே

"மானிட நேயம்".

சட்டங்கள் வகுத்த போதும்

"அடுத்தவன் கண்ணில் 

தூசி விழுந்து விட்டது என்பதற்காக‌

அவன் கண்களைப் பிடுங்கி எறிய‌

இவனுக்கு எந்த‌

உரிமையும் இல்லையே.

தவறு செய்ததற்கு 

கல்லெறிய வருபவர்களே

அந்த கல்லுக்கு அதைப்பற்றி

நீதி சொல்ல உரிமை உண்டா?

அதாவது

எல்லாருமே தவறு செய்பவர்களாக‌

இருக்கும் போது

"ஒருவன் இன்னொருவனுக்கு 

தண்டனை தருவது என்பது"

தவறுகளுக்கெல்லாம்

தவறு ஆகும்.

பொது மனிதம் தவறுவது

பொது மனம் தவறுவது ஆகும்.

அந்த மனம் திருந்துவது

தனி மனிதனின் மலர்ச்சியில் தான்

இருக்கிறது.

மதம் என்பது

சவுக்கு அல்ல.

தலை சீவும் அரிவாள் அல்ல.

மார்பு துளைக்கும் 

துப்பாக்கிக்குண்டுகளும் அல்ல.

தனி மனிதன் 

தன் சிந்தனை எனும் 

அரிவாளால்

தன் தவறுகளை 

தினம் தினம் 

கசாப்பு செய்து கொண்டிருக்க‌

வேண்டும்.

அதில் தான் அவன் உணவு

சமைக்கபடுகிறது

அவன் வாழ.

மதம் காப்பதற்காக வந்தது

என்று சொல்லிக்கொண்டு

லட்சம் லட்சம் உயிர்களை

பலியாக‌

தின்னத்தொடங்கினால்

"மதத்தை" விட‌

கொடிய மிருகம் வேறு எதுவாக 

இருக்க முடியும் ?"

சமுதாய "உள்ளத்துக்கும்"

உளவியல் மருத்துவமே

இப்போதைய தேவை.

அதுவும் மானிட நேயம் சொல்லும்

"கல்வி" மட்டுமே தான்.

அப்படி என்றால்

மதமே வேண்டாமா?

"அடித்துக்கொல்லுங்கடா அதை"

என்று

இரை கேட்டது 

அந்த இறைவம்!


___________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக