புதன், 16 ஏப்ரல், 2025

நம் தடம் தெரியும்..

 

சிறகுகள்

வேண்டும் போல் இருக்கிறது.

அந்த உயரத்துக்குப் போய்

எல்லாம் உற்றுப்பார்க்க‌

வேண்டும் போல் இருக்கிறது.

எறும்புகளாய் ஊரும் 

மனிதர்களின்

அவசரத்திலும் விரைவிலும்

அப்படி என்ன ஒரு தேடல்?

கடிகார முட்கள் 

பின் தொடர்ந்து வந்து

முதுகை குத்திவிடுமோ

என்ற அச்சமா?

காலம் என்ன‌

அப்படியொரு வெட்டரிவாளா?

மனிதனை பலி கொள்ள‌

இந்த அரிவாளை எங்கே

வைத்து அப்படி கூர் தீட்டுகிறது?

கடவுளிடமா

இப்படி சாணை தீட்டுகிறது?

நமக்கு அருள் பொங்கும்

முகம் காட்டி 

தரிசனம் தருபவன்

பின்னாலா

இப்படியொரு கசாப்புக்கடை

நாறுகிறது?

சட்டென்று

பின்னால் திரும்பி நின்று

அதை விரட்ட ஆரம்பிக்கிறேன்.

காலமும் கடவுளும் 

விழுந்தடித்துக்கொண்டு

ஓடுகின்றன.

மனிதனின் அறிவு

ஒரு வெள்ளம்.

திசைகளையும் தின்று

தடைகளையும் விழுங்கி

அது பாய்கிறது.

நாளையே

நான் ஒரு குழியில் விழலாம்.

ஒரு தீயில் மறையலாம்.

ஆனால்

நான் போட்ட இந்த‌

எதிர் நீச்சல் தான் 

வரலாறு.

வரலாறுகள் பேசினால்

நம் இடம் தெரியும்.

நம் தடம் தெரியும்.


________________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக