கைக்குக் கிடைத்த
காலை நேரத்தில்
மிச்சம் பிடித்து வைத்ததைப்
பகலுக்கு
ஊட்டி வளர்க்க முயல்பவன்
இரவை
மிச்சப் படுத்தி எதை வளர்ப்பான்?
கருணையை
மிச்சப் படுத்தி வைப்பவன்
அதைக்கொண்டு எதை
வளர்த்தெடுப்பான்?
அறிவைக் கவனமாகச்செலவிட்டவன்
கவனமே இல்லாமல்
அறியாமைக்குத் தாராளமாய்த் தண்ணீர்தெளிப்பானோ?
இரவுநேரத்தில்
நிலா ஒளியை
மிச்சப் படுத்திவைப்பவன்
கனவுகளை அழைத்துவந்த
தூக்கங்களுக்குப் பரிமாறுவானோ?
சிந்தனைகளை
மிச்சப்படுத்தி வைத்தவன்
மிச்சமே இல்லாமல் பொட்டல் பூமியில்
வாழ்வோடு
புதைத்து விடுவானோ?
மிச்சமான பண்பால்
விடமுடியா நாணத்தை வெட்கத்தை ,
ஆடை அணியாத
நாட்டுக்கு அனுப்பி
அரசியல் கற்று வரச் சொல்வானோ?
24-4-2025 காலை5-40
தலைப்பு-மிச்சங்களால்.........




_________________________________________________________________________
எச்சமாக இந்த முட்டையை இட்ட‌ அந்த முட்டை அதாவது அந்த அண்டம் எந்தக் கோழியின் அடைகாத்தலில் இருந்ததோ? குஞ்சு பொரித்ததும் வந்தது இறைவனா? மனிதனா? இந்த கேள்வியே முட்டை ஓட்டை நொறுக்கிக்கொண்டு வந்தது. இவன் நொறுங்குவதும் அவன் நொறுங்குவதுமாய் இப்போது ஒரு பெரிய ராட்சச முட்டை அதாம்பா அந்த "குவாண்டம்" சொல்லி விட்டது பில்லியன் பில்லியன்...பில்லியன் சோழிகளை குலுக்கி குலுக்கி போட்டுச் சொல்லப் போகிறேன். இந்த எண்களின் பில்லியன் பில்லியன் காடுகளில் எந்த எண் எந்த மிச்சதையும் முட்டை இடாமல் இருக்கிறதோ அந்த "ப்ரைம்"கள் எத்தனை தான் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். உங்களுக்கு மில்லியன் டாலர் பரிசு என்றார்கள். அது தான் இது என்று சொல்லிவிட்டு ஒரு விஞ்ஞானி உன் பரிசும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஆழம் காண முடியாத‌ இந்த அறிவுப்படுகுழியில் வீழ்ந்து வீழ்ந்து தோய்ந்து தோய்ந்து தான் பார்க்க வேண்டும் "ஒன்றும் ஒன்றும் எப்படி இரண்டு ஆனது? அல்லது ஒன்றாகவே இருக்கிறது?" அப்ஸ்ட்ராக்ட் அல்ஜிப்ராவுக்கு மைல் கற்கள் இல்லை. போய்க்கொண்டே இருக்க‌ வேண்டியது தான். சீரோவும் இன்ஃபினிடியும் நாய்க்குட்டிகளாய் பின் தொடரட்டும். ________________________________________________ சொற்கீரன்.