வெள்ளி, 14 ஏப்ரல், 2023

அம்பேத்கார்

 புதுயுகமெல்லாம் எம்கையில்

_____________________________________‍

ருத்ரா



அம்பேத்கார் என்ற‌

சூரியன் எழுந்து

உறுத்து விழித்ததால்

உலுத்தர்களின் புழுகுமூட்டைகள்

உதிர்ந்து போயின.

வர்ணத்தீ மூட்டி 

இந்த தேசத்தின் வேர்களை

எரிக்க வந்தவர்களின் 

சூழ்ச்சி முதுகெலும்பை தன்

சட்ட அறிவின் சம்மட்டியால்

தூள் தூள் ஆக்கினார் அம்பேத்கார்.

இந்த மாமேதையின் பெயர்

ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

அப்போது தான் 

இங்கு மண்புழுக்களின்

பரிணாமம்

வரிப்புலிகள் சீற்றத்தால்

வரியெழுதும்.

கடல் அலைகள் எழுச்சியோடு

ஆதிக்கக்கரை உடைக்கும்.

இடமும் நிலமும் மக்களுக்கே.

அதில் இந்த கரையான்களுக்கு

யார் தந்தது அதிகாரம்?

இட ஒதுக்கீடு என்று 

இந்த எரிமலையையா

இவர்கள் கூறுபோடுவது?

சமூகநீதியின் பெரு நெருப்பு

சரித்திர வெளிச்சம் காட்டிவிடும்.

இந்த பொய்மைச் சாத்திரம் எல்லாமே

சாம்பல் மேடு ஆகிவிடும்.

ஜெய்பீம் ஜெய்பீம் என்றிடுவோம்.

இனி புதுயுகமெல்லாம் எம் கையில்!


____________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக