திங்கள், 28 ஜனவரி, 2019

"தமிழுக்கும் அமுதென்று பேர்"

"தமிழுக்கும் அமுதென்று பேர்"
=================================================ருத்ரா

முதல் சொல் தமிழ்
அடுத்த சொல் தமிழா?
அமுது என்றால்
அம்ருத்யு எனும் அமிர்தம்
என்ற வடசொல் தானே!
அப்படியென்றால்
தமிழுக்கும் வடமொழி தான்
இப்படி இங்கு வந்து
பேர் வைக்க வேண்டுமா?

மரம் என்ற சொல்லில் இருந்து
அதன் பகுதியை பிரித்தால் அது மர.
மர என்றால் உணர்வற்றுப்போ
என்று பொருள்.
செத்துப்போதல் என்பது இன்னொரு சொல்.
இந்த மர மரணம் ஆகி
ம்ருத் ஆனது வேற்று மொழியில்.
அதன் எதிர்றையே அம்ருத்
அது அமிர்தம் ஆகி அமுதம் ஆனது.
பார்த்தீர்களா நம் தமிழ்மொழியே
அயல் மொழியை வளர்த்தபின்
மீண்டும் நம்மிடையே
அயல் மொழி போல் மயக்கியிருக்கிறது.
இதைப்போல்
வடமொழியை செதில் செதில் ஆகப்
பிரித்தால்
அது நம் தமிழே என்பது புரியும்.
அதையும் தாண்டி தமிழ் போல‌
ஒலிக்காத ஒலியெல்லாம்
தமிழ் "திரைகடலோடி"க்கொண்டு வந்த
திரைவியம் அதாவது திரவியம்.
அந்த ஒலித்தொகுப்பு
எழுத்து வடிவம் பெறாமல்
தமிழ்ச்சொல்லான "ஓதம்"(அலை ஓசை)
என்றே வழங்கப்பட்டு
அது "வேதம்" ஆனது
இந்த திரைவிடமே நம் இன்பத்திருவிடம்.


தமிழர்களே
இது போன்ற மயக்க வெளிகள்
நம் தமிழ்க்களத்தில்
நிறைய உண்டு.
மொழிகள் ஒன்றுக்கொன்று
கொடுத்து வாங்கிக்கொள்ளும் தன்மை
உலகியலில் ஒரு மொழியியல்
தன்மை தான்.
ஆனால் தமிழ் தன் சொற்களை
மற்ற மொழியிலிருந்து
எடுத்ததை விட‌
மற்ற மொழிக்கு கொடுத்ததே
அதிகம்.
மேலும் தமிழ் மொழியில்
எடுத்ததற்கெல்லாம்
வடமொழிச்சார்பு உள்ள சொற்களில் தான்
நாம் இடறி விழவேண்டியிருக்கிறது.
அதைத்தவிர்க்க‌
நாம் சங்கத் தமிழ்ச்சொற்களையெல்லாம்
தூசி துடைத்து நம் வழக்கத்தில்
மிதக்க விடவேண்டும்.
அதற்கு அரசும் மக்களும்
தமிழ் உணர்வு மிக்கவர்களாக‌
இருக்க வேண்டும்.
அப்படி வழக்கப்படுத்தும்போது
அந்த தமிழே
மிகவும் கடமுட என்று
நமக்கு ஒரு அயல் மொழிபோல்
ஆகி விடுகிறது.
அதை பொறுத்துக்கொள்ள முடியாமல்
தமிழர்களே
இதை தமிழ்வெறி என்று
தனிமைப்படுத்தி விடுகிறார்கள்.

ஒரு வரலாற்று உண்மை
நமக்கு அடியில் புதைந்து கிடக்கிறது.
"கல் தோன்றி மண் தோன்றா
காலத்தேயும் முன் தோன்றிய"
அந்த தொன்மையை
நான் குறிப்பிட வில்லை.

ஆரியர்களும் திராவிடர்களும்
ஒரே தமிழ்ப்பழங்குடியிலிருந்து
கிளைத்து வந்தவர்களாய் இருப்பார்களோ
என்பது
என் கருத்து..ஆம் கருத்து தான்.
இது நிறுவப்பட
ஒரு ஆழமான அகலமான ஆராய்ச்சி
தேவைப்படுகிறது.

வேறு ஒன்றுமில்லை.
தமிழை விட மிகச்சிறந்த தமிழர்கள்
ஓர் இனமாகவும்
தமிழர்கள் ஒரு இனமாகவும்
இருந்திருக்கலாம் அல்லவா.
ஆரிய திராவிட என்பது
ஆங்கிலேய அறிவினால் ஏற்பட்ட‌
சொற்றொடர்கள் என்கிறார்கள்.

ஆனால் என்கருத்தின் படி
"ஆர்" "திரை" என்ற‌
இரு சொற்களின் ஆழமும் நுண்மையும்
நம் இந்தியாவின் முதன்மை மொழி
தமிழே தான் என்பதை
சான்று பகரும்.
இது இந்தியா அல்ல.
இது சிந்தியா.
ஆம் சிந்துவெளித் தமிழர்களின்
நாடு தான் இந்தியா.


இது எப்படி இருக்கு
என்று கேட்டு
உங்களுக்கு சிரிக்க தோன்றுகிறதா?
சிரித்துக்கொண்டிருங்கள்.
நம் சிந்தனையை தொடர்வோம்.

(தொடர்வோம்)

===================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக