வியாழன், 24 ஜனவரி, 2019

வந்தா ராஜாவாத்தான் வருவேன்

"வந்தா ராஜாவாத்தான் வருவேன்"
==============================================ருத்ரா

"ராஜாவே வருக
இந்த கட்டெறும்புகள் கடிப்பது
தாங்க முடியவில்லை"
"வாங்க மச்சான் வாங்க மச்சான் "
என்று ஆட்டம் அதிருகிறது.

டீசர் பாட்டு தூள் பறக்கிறது.
சிம்பு என்ற சிலம்புக்குள்
இருக்கும் பரல்கள்
உண்மையிலேயே
மாணிக்க முத்துப்பரல்கள் தானா?
இல்லை
பரபரப்பு "பீப்"பாடல்களின்
ஒலிச்சிதைவுகள் தானா?
பேர் சொல்லும்படி
ஓரிரு படங்கள் தந்திருக்கிறீர்கள்!
உங்கள்  இடத்தை
ஏன் நீங்கள்
தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை?

இன்றைய வெற்றிக்கதாநாயகர்கள் எல்லாம்
பஞ்ச் டையலாக் எனும்
மாஞ்சா தடவிய பட்டங்கள் தான்.
நமக்கோ
சோறு என்று
சீட்டில் எழுதினால்கூட போதும்
அதையும் தின்று தீர்க்க‌
இந்த சினிமாநிழலையே
ஊறுகாய் ஆக்கிக்கொள்வோம்.
அதனால்
அரசும் கூட இலவசங்களை
முட்டையிட்டு
இந்த ஈசல்களை வைத்து
தங்கள் நாற்கலிக்கு
காங்கிரீட் போட்டுக்கொள்ளுகின்றன.
இந்த குத்தாட்டங்களில்
இவர்கள்
வலிப்பு வந்தவர்களாய்
தங்கள் வலிகளை மறைத்து
தங்கள் வழிகளை மறந்து
சாமி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தக்கூட்டத்தில்
நீங்களும்
அந்த காக்காய் இறகுகள் சூடிய
மகுடம் தரித்த
ஜிகினா ராஜாவாய்
வருவதில் எங்களுக்கு ஒன்றும்
ஆட்சேபணை   இல்லை.
அடேயப்பா!
உங்கள் ஆட்சியில்
பாலாறு தேனாறுகளின்
காட்டாறுகள் அல்லவா
ஓடும்போலிருக்கிறது!
அண்டா அண்டாவாய்
உங்கள் கட் அவுட்டுக்கு
பாலாபிஷேகம் செய்ய
இப்போதே
அரசாணை பிறப்பித்து விட்டீர்கள்
போலிருக்கிறதே.
தமிழ் மக்களுக்கு
எதுகை மோனைகள் சொல்லி
அப்புறம் ஓய்ந்து உட்கார்ந்து விட்டாரே
உங்கள் தந்தை.
அது போல் நீங்களும்
இந்த சினிமாவின் சீட்டுக்கட்டு
ராஜாவுக்கா
இப்படித்துள்ளிக்குதிக்கிறீர்கள்.
சிலம்பு என்ற உங்கள் பெயர்
தமிழ் மக்களின்
அக்கினிக்கனவுகளை
விடியலின் பரல்கள் ஆக்கி
உள்ளே ஒலித்துக்கொண்டிருப்பது
உங்களுக்கு கேட்கிறதா?
யோசியுங்கள்!
எது எப்படியாயினும்
உங்கள் முயற்சிகள்
இமாலய வெற்றி பெற
எங்கள் வாழ்த்துக்கள்!

===========================================================













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக