செவ்வாய், 22 ஜனவரி, 2019

சென்னை புத்தக விழாவும் நானும்

சென்னை புத்தக விழாவும் நானும்
==============================================ருத்ரா

இப்படித்தலைப்பிட்டு எழுத‌
வெட்கம் இல்லையா உனக்கு?
நீ என்ன
புத்தகம் ஏதாவது எழுதிருக்கிறாயா?
அல்லது
புத்தகம் வாங்கி
குவிக்கப்போகிறாயா?
இரண்டும் இல்லை.
அப்புறம்
கொல்லம்ப்பட்டறையில்
ஈக்கு என்ன வேலை?
புத்தகம் வெளியிட ஆசைப்பட்டதுண்டு.
அவ்வப்போது
சில பத்திரிகைகளில்
என் படைப்புகள் வெளிவந்தது உண்டு.
இப்படி
புத்தகங்கள் எனும் ஈசல்கள்
கடை பரப்பி
கனவுகளின் கடல் பரப்பி
சிறகடிப்பது கண்டு
அந்த உற்சாகம்
என் இருட்டு மூலைகளின்
அவநம்பிக்கைத்தீவுகளுக்கு கூட‌
வெளிச்சம் படர்வது
உன்னதமானது தான்.
ஆவலும் ஆர்வமும்
கூடவே பொறாமையும்
கொழுந்து விட்டு எரிந்தது உண்டு.
கொழுந்து விட்டுக்கொள்ளட்டும்
எனக்கு கவலையில்லை.
எனக்குத்தகுந்த எள்ளுருண்டை
இந்த விரல்களிலும் விசைப்பலகையிலும்
தினமும் உண்டு.
இதில் என்னைக் "கண்டு" கொண்ட‌
வாசகர் உலகம்
தினமும் "பூச்செண்டு" ஒன்றை
என் முன் நீட்டுவது கண்டு
எனக்கு மிக்க மகிழ்ச்சி!
அச்சு எந்திரங்கள்
என் எழுத்துக்களை
கறைப் படுத்தவில்லை.
என் கன்னித்தமிழுக்கு
என்றைக்கு சாந்திமுகூர்த்தம் என்று
இன்னமும்
கவலைப்பட்டுக்கொண்டதில்லை.
வாழ்க்கை எனும் கிண்ணத்தில்
சுவைக்கப்படாத‌
மதுத்துளிகள் இருந்து கொண்டே
இருக்கவேண்டும்.
காக்கையாக பறந்து பறந்து
ஒவ்வொரு கல்லாக‌
போட்டு
என் எழுத்துத்தாகம்
தீர்க்க
இந்த விசைப்பலகையின் 
வானம் தோறும்
வருடிக்கொண்டே இருக்கிறேன்.

===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக