சிலேட்டுப்பலகை..2
முகப்பு
ஃபீடு பதிவுகள்
காதோரம் வந்த
காற்று அள்ளிவந்த தெம்மாங்கை
அவிழ்த்துவைத்தது
சொக்கிப்போன என்னைக்
ஆராரோ ஆரிரரோ வாசல்படி தாண்டி
நுழைந்துவிட்டது
என் தாய் வள்ளியம்மா
வந்துவிட்டார்
நான் கிடந்த தொட்டிலும் வந்துவிட்டது
மூப்பைத் தூக்கி
மூட்டைகட்டி எறிந்துவிட்டுத்
தொட்டிலை விலக்கி என்தாய்முகம்
கண்டேன்
ஜெகுக் கண்ணா தூங்கடா
என்றாள் அம்மா!
தூங்கினால்
பாட்டை எப்படி அம்மாநான் கேட்பது
என்றேன்
தொட்டில் தொடர்ந்து ஆடியது
அம்மா தாலாட்டும் தொடர்ந்தது!
காதோரம்
வந்த காற்று இன்னொருநாள்
பட்டினத்தார் பாட்டுப்
பொட்டலத்தைப் பிரித்து வைத்தது
தாயின் பிரிவுத்துயரின்
ஆற்றாமையால் அவர்பாடிய பாடல்
தங்கவேல்அண்ணன் கண்ணீரில்
விழுந்தபோது அது
கடலாகிப்போனது
கரைகாணாமல் தேம்பியது
என் தாயின் முதல்மகன்அல்லவா!
அவள் கனவுகளின்
முதல் முத்தமல்லவா அவர்!
காதோரம்
வந்த காற்று மற்றொருநாள்
சட்டென்று விலகிப்போனது
தமிழ்மறந்த ஒருவனின்,
தமிழ்கெடுப்பார் கைக்கூலியாக
மாறிவிட்ட ஒருவனின்,
தந்தைபெரியாரைத் தரம்தாழ்த்திப்
பேசும் ஒருவனின்,
மூச்சுச் சடலத்தை அன்று
தொட்டுவந்ததுதான்
காரணமாக இருக்குமோ?
13-02-2025 முன்னிரவு 7-15
தலைப்பு- காதோரம் வந்த காற்று
-----------------------------------------------------------------------------------------
ஒரு ராட்சசப்பறவையின்
எச்சம் போல் தான்
நம் மீது
இந்த மரணம் வந்து விழுகிறது.
வானமே
வானம் கொள்ளாத சிறகுகளையும்
கூர் நகங்களையும்
கொண்டு
நிழல் காட்டுகிறது.
சூரியன் கூட அந்த
மேகக் கைக்குடைகளினால்
கண்ணீர் துடைத்து துடைத்து
நகர்கிறான்.
கண்ணீர் ஏழு வர்ண நிறப்பிரிகையில்
ஏழாயிரம் சோகங்களாய்
பிழியும்போது கூட
அடி உள்ளத்தின் கேவல்களே
உங்கள் அகவல் பாக்கள்.
ஆனால் அதனுள்ளும்
உங்கள் எரிமலை ஈரமாயில்லை.
அந்த ஈன மகன்
அன்னைத்தமிழ் முகத்தில்
ஆசிட் வீசிட
பெரியாரை முகவரியை
சிதைக்கத்துணிந்தான்.
ஈரோடு
ஈரோட்டிலா இருக்கிறது.
தமிழ் நெஞ்சங்களின்
இழைகளின் "நெசவுகளில்" அல்லவா
இருக்கிறது!
உங்கள் கவிதையில்
ஒரு அழுகை
அக்கினி ஆற்றின் ஊற்றில் இருந்து
தானே
பெருகிக்கொண்டு ஓடுகிறது!
___________________________________________________
சொற்கீரன்.
13-02-2025 ல்
"காதோரம் வந்த காற்று"
என்ற தலைப்பில் எழுதிய
ஈரோடு தமிழன் அவர்களின்
கவிதை பற்றிய கவிதை இது.
அடர்ந்த
பனிப்படலத்தின் ஊடாக
மனம் எங்கே செல்கிறதோ
அங்கு
அவனுடைய தணிந்த சினங்கள்
நனைந்து கிடக்கலாம்
புதிதாய்ப் பிறந்த
கவிதைகள்
புற உலகின் குளிரில்
நடுங்கிக்கொண்டிருக்கலாம்
காலை இளவெயிலின்
கதகதப்பிற்கு,
கைநீட்டி எடுக்கும்வெயில் விரல்களுக்கு
ஏங்கிக் கொண்டிருக்கலாம்
முரண்இறுக்கத்தில்
மூச்சு இறுகிய நட்பும் உறவும்
வழித்தடக்குழிகளில்
அவன் பாதச்சுவடுகளின்
பாச ஓசைக்குக்
காத்திருக்கலாம்
சில்லிட்டுப்போன
நம்பிக்கைகளில் சிதறிய கனவுகளில்
நொடிகளின் கூரலகு
கொத்திக்கிழிக்கும் அவன் வாழ்க்கை
உலைக்கூட வெந்தணலில்
விழவரமாட்டானா என்று
ஆயுதக்கண்திறந்து காத்திருக்கலாம்.
12-02-2025 மாலை 6-40
மனம்போகும் வழி
________________________________________________________________________________
மனம் போகும் வழி!
எது
அதன் கங்கோத்திரி அல்லது
தலைக்காவேரி?
அல்லது
அறுந்து தொங்கும் வான விழுதுகளின்
கண்ணுக்குத் தெரியாத
அந்த நுனியா
அதன் தொப்பூள்கொடி
துளிர்த்த இடம்?
தாறு மாறான கற்பனைகளின்
கருப்பத்தில்
கனவு நூலாம்படைகளோடு
கண் முழிக்கும்
கணிதச்சுழியின்
அந்த "சிங்குலாரிடியில்"
அந்த ஒருங்கிய சுருங்கிய
புள்ளியிலா
இத்தனை கோடி அண்டங்களும்
பிறந்தன? அல்லது இறந்தன?
இறந்தவையும் பிறந்தவையும்
மனிதம்
என்னும் கணித சமன்பாடுகளின்
கூரிய கீதத்தில்
கீற்றுகளை அலை விரித்தது.
காதல் என்றான்
அதன் சதை விடிவமாய்
ஒரு பெண்ணை அச்சு வார்த்தான்.
அதுவும்
ஒரு அதள பாதாளம் தான்.
விழுந்து கொண்டே
எழுந்து கொண்டிருக்கின்றன
சூரியக்குமிழிகள்.
அதுவும் அவனுக்கு
அந்த இருட்டுக்குழம்பில்
கருப்பிடித்த
வெளிச்சத்தின் குவளை விழிகள்.
இன்னும்
என்ன இவன் என்று
அறிவு எறும்புகளும்
அறிவு செத்த எறும்புகளும்
மொய்த்துக்கொண்டு தான்
இருக்கின்றன.
__________________________________________________
சொற்கீரன்
09.02.2025
ERODU THAMIZANBAN
என்ன செய்தால்
உடல்நலம் தேறும் ?"
கடந்த ஒருவாரமாக,பொருள்,இடம்,
காலம் ,சினை,குணம்,தொழில்- இப்படியான
எந்தப்
பெயர்ச்சொற்கள்
வலுத்த பொருளின்மையைப்போர்த்திக்
கொண்டு
படுத்திருந்தன கட்டில்களில்
வேற்றுமை உருபுகள்
தூரத்திலிருந்தே பெயர்ச்சொற்கள்
அனத்துவதை இருமுவதைக்
கேட்டுக்கொண்டிருந்தன
ஐ ஆல் கு இன்அது கண்
இவற்றுள்
தமக்கெனப் பொருள்உடையன
அவற்றை
வளர்த்தெடுத்து
ஏதேனும் செய்யமுடியுமா என்ற
தவிப்பில்
நன்னூலார் வீட்டு வாசலில்
கூடாரம்போட்டன
மொழித்தைலம்
மொழிச்சூரணம்தேடிப்போன
சித்தமருத்துவர்கள் நம்பிக்கையோடு
கடைமுகவரிகள்
கேட்டுக்கொண்டிருந்தனர்
அந்தப் பக்கமாக--
சும்மா இருக்காமல் எப்போதும்
பெயர்ச்சொற்களைப் பிடித்தாட்டும்
வினைச் சொற்கள்
நெருங்காதபடி வேலிகள்போடப்பட்டன.
வினை சும்மா வந்தால்
விலகியிருந்தால்
குற்றமில்லை.......
வினையின்வந்தது
வினைக்கு விளைவாகியது என்று
சாத்தனார்
வத்திவைக்கும் வினைபற்றி
யாத்தவரி பொய்யா சொன்னது!
...
பூ என்றபெயர் செடிக்குக் கிடைத்த
புன்னகை....
அது
மலர்கிறது என்று மொழி அறிவிக்கும்
மகிழ்கிறோம்
கவிதையும் மகிழ்கிறது
அது உதிரும் என்று
அதேமொழி அறிவிக்கிறது
அதிர்ந்துபோகிறோம்
அதே மொழி
அது உதிர்ந்தது என்று
கண்ணீரஞ்சலிப் படம்போட்டதும்
அழுகிறோம்.
ஒப்பாரிக்குள் கரைந்து விழுகிறோம்.
நாம் மட்டுமா அழுகிறோம்?
மண் அழுகிறது மரம்அழுகிறது
செடிகொடிகள் சேர்ந்தழுகின்றன
காதல்வண்டுகளும்
வண்டுஉதடுகள் கொண்டுவந்த
பாடல்களும் அழுகின்றன.
எனவேதான்
வினையின்நீங்கி விளங்கியஅறிவின்
முன்னோர்கள்
இடைநிலைகள் கடந்து
எப்போதுமான ஞானமானார்கள்.
.....................................
இன்றுகாலைசென்னைச்செந்தமிழ்
மன்றம் நடத்திய"நன்னூல் பன்னாட்டுக் கருத்தரங்கக்கட்டுரைத்தொகுதிகள்
வெளியீட்டுவிழா அண்ணாநூற்றாண்டுவிழாநூலகத்தில்நடைபெற்றது.என்னோடுபேரா
பொற்கோ,பேரா முத்துவேல்
தமிழ்வளர்ச்சித்துறைஇயக்குநர்ஔவைஅருள்ஆகியோர்பங்கேற்றனர்
விழுப்புரம் அரசினர்கலைக்கல்லூரி
முதல்வர்பேரா தாமரைக்கண்ணன்
கலந்துகொண்டார்.பேரா ஆ.இரமேசுடன்கல்விப்புலநாயகர்பலர்கலந்துகொண்டனர்.
நன்னூலார்வழிஏற்பட்டதூண்டுதலே
இக்கவிதை.
09-02-2025. மாலை 6-22
தலைப்பு காலம்கடப்போமா?
________________________________________________________________________________________
வினையே
நுட்பம் தான்.
அப்புறமும் நாம்
வினை நுட்பம் பற்றி
எத்தனை இலக்கணம்
சொல்கின்றோம்?
வினையை மட்டும் சொல். போதும்
அதனுள்
காலம் பொதிந்து கிடக்கும்.
சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
வகையில் தான்
வினைத்தொகை சொல்கிறது.
இதற்குள்
எத்தனை மெய்ஞானம்?
எத்தனை விஞ்ஞானம்?
பூமியின்
நகர்வை வைத்து தான்
நாளும் நொடியும்.
அதன் இடைவெளி வைத்து தான்
விண்ணும் வெளியும்.
ஆல்பர்ட் ஐன்டீன்
காலைத்தையும் வெளியையும்
சேர்த்தே
சூத்திரம் பிசைந்து விட்டார்.
தொல்காப்பியர்.
காலத்தை மாத்திரையாக்கி
சொல்லுக்குள் வைத்தார்.
வினை
செயலா?
காலமா?
தமிழுக்குள்
குவாண்டமும் இருக்கிறது
அண்டமும் இருக்கிறது.
சொல் வாழ்க்கையாய்
இலங்குகிறது.
அது இலக்கணம்.
ஞகரம் வலித்து
ககரம் ஆனது.
இலக்கியம் ஆகும்போது
ககரம்
பீலி சூட்டிக்கொள்கிறது.
வினையே எல்லாம்.
அதற்கு எதற்கு பெயர் என்று
அதுவே எல்லாம் ஆகியதாய்
ஆகுபெயர் என்று
ஒரு விந்தை புரிகிறது.
மனிதன் மரம் மட்டையில்லை.
அவன் "நகர்தல்"செய்யும்போது தான்
நகர் ஆகி நாகரிகம் ஆகி
அந்த ஆகுபெயரே
அவனை உலகம் முழுதும்
அடையாளப்படுத்துகிறது.
இமிழ் எனும் பகுதி ஒலித்து
தன்னையே அது
தமிழ் ஆக்கிக்கொண்டதே
ஒரு ஒப்பிலா இலக்கணம்.நீங்கள் கட்டிய இலக்கண மண்டபத்தில்
தமிழின் வரலாற்றுத் தோரணங்கள்
அதன் மாணிக்க சொற்கள் தான்
என்று அவை
பளிங்கு உளி கொண்டு செதுக்கிய
தெளிவான வடிவங்களாய்
சுடர் தெறிக்கச் செய்கின்றன.
_____________________________________________
சொற்கீரன்
_______________________________________________
சொற்கீரன்
__________________________________________________________________________________
கவிதைகளைத் தொகுத்தான
பிறகு
அச்சில் கொண்டுவரவேண்டும்
இல்லாவிட்டால் ஏமாற்றம்
எழுதியவனுக்கு மட்டுமில்லை
கவிதைக்கும்தான் இல்லையா?
எடுத்துமுத்தமிட எவரும்
இல்லையெனில்
எதற்குப் பிள்ளைபெறவேண்டும்?
என்றுதன்னைத்தானே
கேட்டுக்கொண்டான்.
இவனைப் பெற்றபோது
இவன்தாய்இப்படி நினைத்திருப்பாளா?
அச்சுமுதலாளி
சொன்னார்
சின்னவர்நீங்க ஏமாறக்கூடாது
நம்மகிட்டவந்து
புத்தகம் போட்டவர்தான் நிம்மதிமாறன்
மனுசன் அவர்பேர்சொல்லும்
புத்தகத்தைக் கண்ணில்
பார்க்காமலே போய்விட்டார்.
இதைக்கேட்டதும்
கவிதைகளை மறந்து
இவன்
கல்லறைக்காட்டுக்குப் போன
மனத்தோடுசேர்ந்து போய்விட்டான்
தம்பி!உங்கள்
புத்தகத்தை நாங்க போடறோம்!
யார் இல்லை என்றுசொல்லமுடியும்
உங்களுக்குள்
ஒரு கம்பர் இருக்கலாம்
ஒரு ஒட்டக்கூத்தர் இருக்கலாம்
ஏன்
ஒருகண்ணதாசன் இருக்கலாம்
அதை உலகம் கண்டுபிடிக்கும்
இதைக்கேட்டதும்
இவன் வலப்பக்கம் கம்பரும்
இடப்பக்கம் ஓட்டக்கூத்தரும்
விசிறி வீசும் காட்சி
கற்பனைக்குள் கதவுதட்டாமலே
வந்துவிட்டது;
கண்ணதாசன்
இவன் கனவுக்குள் வரும்முன்பே
பதிப்பாளர் கனைப்பொலி
குறுக்கிட்டு நுழைந்துவிட்டது
பதிப்பாளர்
புத்தகம் எழுதித் தோற்றபின்
அச்சகம்ஒன்றில்
தேநீர் மோர்ப் பையனாகச் சேர்ந்து
வளர்ந்து இந்த இடத்துக்கு வந்தவர்.
இந்த வரலாறெல்லாம்தெரியாத
இவன்
ஒருவேளை தெரிந்திருந்தால்
தேநீர் மோர்ப் பையனாகச்சேர்ந்து
உச்சம் தொட்டிருப்பானோ என்னவோ!.
இவன் கற்பனைக்குள்ளும்
கனவுக்குள்ளும்
யாருடைய தயவும் இல்லாமலே
போவதும்வருவதுமாக இருந்தான்.
பதிப்பகப்பெயரை
முன்பே சொல்லியிருக்கவேண்டும்
அது
பண்டரிநாதன் பதிப்பகம்
அதுவும்நம்பிக்கை ஊட்டும்
ஒருபெயர்தான்.
உரிமையாளர் கோவிந்ததேவன்.
அவர்சொன்னார்
வருங்காலத்தில் பெரியபெரிய
விருதுகள் தம்பிக்கு வரும்;வரவேண்டும்
நமக்கு
அந்தப்
பெருமையிலேமட்டும்
பங்குவந்தால்போதும் வேறொன்றும்
வேண்டாம்.
நாமே அச்சுப் போடறோம்
நீங்களும் எதுவும் கொடுக்கவேண்டாம்
நாங்களும் எதுவும் தரமாட்டோம்!
இவனும் எதுவும் பதில்சொல்லாமல்
கவிதைகளை
ஒவ்வொன்றாகத்தெருவில்
உதறிக்கொண்டே
வீட்டுக்குத் திரும்பினான்.
07-02-2025மாலை 5-25
இவன்யாரெனக்கேட்பின்..
_____________________________________________________
மண்டபத்து தருமிகளின்
மண்டைக்குள் இருப்பதையெல்லாம்
அப்ப்டியே
முப்பரிமாணத்தில்
கொண்டு வந்து தந்து விட்டீர்களே
அய்யா!
அற்புதம்.
எழுத்தாளனுக்கு
எப்போதும் கடலளவு ஆசை
என்பது தான்
அவன் பேனாவுக்குள்ளே
அலையடிக்கொண்டு
கருவுற்றிருக்கும்.
அவன் நிப்பு காகிதத்தில்
உரசியவுடனேயே
ஒரு நோபல் பரிசு அவன்
மூக்கு நுனியில்
வேர்த்துக்கொண்டு நிற்கும்.
நீங்களும்
பிறந்த இடம் அந்த
மண்டபத்து மூலை தானா
என்று என்னை
நீங்கள் கேட்பதற்கும்
அல்லது
நினைப்பதற்கும்
எல்லா இடமும் இருக்கிறது.
அந்த மண்டபத்து மூலையில்
இருந்து கொண்டே
ஒரு சங்கப்பலகையை
ஏன் உங்கள் நினைவுகளில்
வருடிக்கொண்டிருக்கக்கூடாது?
அந்த
"அஞ்சிறைத்தும்பியும்
அணிலாடு முன்றிலும்"
உங்கள் மீதும் நிழலாடும்.
எழுத்துக்களின் சிகரம் ஏறும்
படிக்கட்டுகளில் தான்
நின்று கொண்டிருக்கிறீர்கள்
"சீயர் அப்"
என்று சொல்வது போல் தான்
எனக்கு உற்சாகம் பீறிடுகிறது!
தினம் தினம்
உங்கள் கவிதை தரும்
"அமிழ்தம்" எனும் நம் "தமிழ்தம்"
அண்டவெளிக்கும் அப்பால்
என்னை மிதக்க வைக்கிறது
என்பதே உண்மை.
பதினெட்டாம்
மேல் கணக்கோ
கீழ் கணக்கோ
இலக்கிய உள்ளத்தின்
நடுக்கணக்கில் இருந்து கொண்டு
நயம்பட உரைத்து
நம்பிக்கைக்கதிர் பாய்ச்சுகிறீர்கள்.
இது வரை விருது விளம்பரங்களின்
சுவைக்காக என் பேனாவில்
எச்சில் ஊறியதில்லை.
ஆனால் உங்கள் கவிதை
ஒரு எழுத்துத்துடிப்பின்
உள்ளார்ந்த ஓர்மையை
பளிங்குப்பார்வையில்
நன்றாகவே ஒளி பாய்ச்சுகிறது.
நன்றி!நன்றி!!
___________________________________________________
சொற்கீரன்
07.02.2025
________________________________________________________________
ஏழு சுரங்களின்
அந்த சுரங்கத்துக்குள்
எத்தனை எத்தனை
ஒலி விரிப்புகளோ?
அவற்றை எல்லாம்
ரத்னக்கம்பளம் ஆக்கும்
பாடல்கள்
கவிஞனின் சிந்தனைக்குள்
அல்லவா
சுவடு பதிக்க வேண்டும்.
இதில்
தூங்குவது யார்?
விழித்திருப்பது யார்?
கனவுகளில் புதைந்திருப்பது
யார் அல்லது எது?
இந்த முக்கோணம் கூட
ஒரு மர்மமான
பெர்முடா முக்கோணம்.
இந்த ரசவாதத்தில்
யுகங்களே மூழ்கி விடுவதுண்டு.
காலத்தின்
கால் கெண்டை நரம்புகள் தான்
வீணைக்கு கடன் வழங்கியிருக்கும்.
அது நொடிப்பொழுதின் சிட்டிகையில்
எத்தனை ஜிகினா உலகங்களை
மிதக்க விடுமோ?
யார் பாடியது?
பாட்டுக்கு சொந்தக்கார பேனா எது?
வீணையின் தந்திக்கம்பங்களில்
உட்கார்ந்திருக்கும்
அந்த தேன் சிட்டுகளா
இந்த அமுத மழையை பொழுவது?
இப்போது
இந்த கேள்வி விழுதுகள்
சாருகேசியிலா
ஆனந்த பைரவியிலா
எந்த சாயத்தில் முக்கி
எடுக்கப்பட்டிருக்கும்.
சரி விடுங்கள்.
சபா கேண்டீனில்
மசாலா போண்டா
மூக்கு நுனியில் தொட்டு தொட்டு
கூப்பிடுகிறது.
சரஸ்வதி வீணையை
அங்கே போய்
தரிசித்து விட்டு வரலாம்!
_________________________________________________
சொற்கீரன்
06.02.2025ல்
பாடல் உறங்குமோ?
வீணை எழுப்புமோ?
என்ற தலைப்பில் வந்த
ஈரோடு தமிழன்பன் அவர்களின்
கவிதை பற்றிய கவிதை இது.
_____________________________________________________
ஃபீடு பதிவுகள்
பாடலை எழுப்ப
வீணையை அழைக்கவேண்டாம்
பாடல் உறங்கும்போது
ஏழிசை,
வீணையின் நரம்புகளோடு
பாடலின் ஓய்வு
சிந்துகள் தெம்மாங்குகள்
புதிய எல்லைகளில்
கால்நகர்த்தும் காலமாக இருக்கலாம்
கதவைச் சாத்தி வைத்த
தாளங்கள்
கணக்கைச் சரிபார்க்கும்நேரமாக
இருக்கலாம்
கடல்அலைகளில்
காற்றின் விரல்கள் பியானோ
கட்டைகளைத்
தொட்டுச் சிலிர்க்கும்
நள்ளிரவாக இருக்கலாம்.
பாடல் தூங்கும்போது
பதங்கள் விளையாட வெளியே
போயிருக்கலாம்
அல்லது
அர்த்த ஐயங்கள் தீர்த்துக்கொள்ள
அகராதிகளோடும்
அனுபவ இசைத் தொகுப்புகளோடும்
உரையாடிக்கொண்டிருக்கலாம்.
பாடலை
எழுப்புவதே வீணையின்
வேலையல்ல
அடிக்கடி இப்பணிக்கு ஏவப்பட்டு
அதற்கும்
நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டுவிட்டால்
மருத்துவம் யார் பார்ப்பது?
பாடல்
உறங்கும்நேரத்தில் அதன் கனவுகள்
அதற்குப்
புதுப்புதுக்காட்சிகளைத் திறந்து
வைக்கலாம்.
கற்பனைக் காட்டிலிருந்து
மலர்களின் தூதுகள் வரலாம்.
இசையின் ஏழு உதடுகள் இன்பத்
தாதுகள்பொழியலாம்.
பம்பரம்
அதிவேகமாகச் சுழலும்போது
அது உறங்குவதாகத் தெரியும்
பாடல் உறங்குவதும்
அப்படித்தான் என்று வீணை
அறியுமோ?
வேறு யாரும் அறியமாட்டார்களோ?.
6-2-2025 காலை 9-22
தலைப்பு
பாடல்உறங்குமோ?
வீணை எழுப்புமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக