பூவா? தலையா?
போட்டு பார்க்கலாமா?
தேர்தல் ரிசல்ட் கொப்பளிக்கப்பட
இன்னும்
இரண்டு மணிநேரம் ஆகுமே.
பூவா தலையா என்பதற்குப்பதில்
குதிரையா? கழுதையா?
போட்டுப்பார்க்கலாமே!
அந்த சின்னங்களோடு
"ஓட்டாஞ்சல்லி"யை நாணயமாக
மேலே எறிந்து அது கீழே
எப்படி விழுகிறது
என்று பார்த்தோம்.
ஒரு தடவை "குதிரை விழுந்தது".
போய் எடுத்துப்பார்க்கும் போது
கழுதை வந்தது.
இப்படி குதிரையும் கழுதையும்
போக்குக்காட்டிக்கொண்டே
இருந்தன.
அது எப்படி?
தரையில் குதிரை விழுந்தும்
எடுக்கும் போது
கழுதை ஆனது?
எல்லோருக்கும் குழப்பம்.
இது ஏதோ
ஹேக்கிங் என்கிற
பில்லி சூன்யம்.
அல்லது
சூழ்ச்சி சாணக்கியம்
என்று மக்கள் கொந்தளிக்க
ஆரம்பித்து விட்டார்கள்.
முடிவு என்ன?
சிந்தனைக்கோளாறு தான்.
பாசிசமா? பாயசமா?
என்று
பாசிசத்தையே
கழுத்தில் மாலையாக சூடிக்கொண்டு
கொட்டு அடித்ததால்
அந்த இரைச்சல்களில்
அமிழ்ந்து கிடந்தது ஜனநாயகம்.
எது வென்றது?
யாருக்குத்தெரியும்?
நூற்றாண்டுக்கொண்டாடத்தில்
கும்மாளம் போடும் அந்த
பாயசம் எனும்
மதமும் சாதியும்
மக்களை மதி
மயக்கிக்கொண்டு தான் இருக்கிறது.
குதிரையா? கழுதையா?
மந்தையா? மக்களா?
அந்த "ஒட்டஞ்சல்லி"
சிறகடித்துக்கொண்டே ...
விழுந்து கொண்டே...
இருக்கிறது.
_____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக