முள்ளிவாய்க்கால்
______________________________
ஒரு விடுதலையின் சமுத்திரம்
ரத்த சாட்சியாய்
இன்னும்
அலையடித்துக்கொண்டிருந்த போதும்
ஏதோ
ஒரு வாய்க்கால் அல்லது
ஒரு ஓடை அல்லது
ஏதோ ஒரு சில கண்ணீர்த்துளிகளின்
ஈரக்கசிவு
என்று எப்படி இது
காணாமல் போனது?
உலக ஆதிக்கம்
ஒரு வெள்ளை இனத்தின்
ஆரியம் ஆகிப்போனதால்
தமிழ் எனும்
எரிமலை லாவா எனும்
குரலின் குரல்வளை
இன்று வரை
அவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இதோ ஒரு சான்று.
சிந்து வெளி
கீழடி
ஆதிச்சநல்லூர்
இன்னும்
எத்தனையோ
பூமியின் அடிவயிற்று
சாசனங்கள்
ஆராய்ச்சிப்படுகைகளில் இன்னும்
படுத்துக்கிடக்கின்றன.
பூமியின் முகவரிக்குள்
கருப்பு சூரியன்கள் கோடி கோடியாய்
அந்த ஆப்பிரிக்கக்கண்டத்தில்
அடர்ந்து கிடந்த போதும்
அந்த வெள்ளை அனக்கோண்டாக்கள்
விழுங்கித்தீர்த்து விடவே
தன் மூலதனத்துக்கோட்டை
கொத்தளங்களை
சீற்றத்தோடு நிறுவிக்கொண்டிருக்கின்றன.
கருப்புத்தமிழுக்குள்
ஒரு நெருப்பின் அக்கினிக்குஞ்சுகள்
என்றைக்கு
சிறகுகளை படபடக்குமோ
அன்று தான் அந்த
சரித்திரத்தின்
சரித்திரங்கள்
வானம் சிவக்க சிவக்க
சிலிர்த்து நிற்கும்!
______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக