புதன், 28 மே, 2025

"ரேப்" எனும் கால்மிதிகள்

 "ரேப்" எனும் கால்மிதிகள்

____________________________________


அம்பு இல்லாமல்

வில் இல்லாமல்

இந்த கொடூரங்களின்

ஆரண்ய காண்டங்களை

அடித்து வீழ்த்த வந்த‌

ஜனநாயக பாட்டுகளின்

விடியல் விளக்கே!

உன் ஒலி வெள்ளத்தின்

வெளிச்சம்

இந்த சாதி மதப்பேய்களை

வேரோடு அழித்து ஒழிக்கட்டும்.

மனிதம் என்றால்

அது 

மனிதனின் பேரவதாரம்!

அரக்கர்கள் வேடத்தில்

கடவுள்களும்

அரக்கர்களாகவே வந்து

அரக்கத்தனத்தை

ஆட்சி செய்யும்

அக்கிரம சாஸ்திரங்களும்

உன் முழக்கங்களின்

பிரளயத்தில்

அடியோடு மூழ்கிப்போகட்டும்.

அரிதார ராமர்களும் விசுவாமித்திரர்களும்

வெல வெலத்து வீழட்டும்.

இவர்கள்

வால்மீகிக்களைக்கொண்டே

வால்மீகி மக்களையும் கூட‌

அழிக்க வரும் 

நச்சுப்படைகள்.

பொய்மை 

இதிகாசங்களை

மிதிகாசங்கள் செய்யும்

உன் குரல்களே

இங்கு எரிமலைக் கீதங்கள்.

"தா தை தீம் திரி கிட.."

போதும் 

இப்படி விலங்கு மாட்டியது.

சாஸ்திரிய சங்கீதத்துள்

இத்தனை நூற்றாண்டுகளய்

ரத்தம் சொட்டும் கீதங்களாய்

அடிமைத்தனத்தின்

கசாப்புக்கத்தியை 

நீட்டியது போதும்.

மனித அநீதிகள் ஒழிக.

சமுதாயத்து சம நீதிகள் வெல்க!


_____________________________________________

சொற்கீரன்




வேடன்

______________________________


எதற்கு வில்லும் அம்பும்?

பாட்டும் முழக்கமும்

போதுமே.

மூன்றாவது அடியை

எங்கே மிதிக்க 

என்று திமிராய்

கேட்ட கடவவுளின்

முதுகுத்தண்டு 

நொறுங்கி விழுந்திடட்டும்.

பக்தியோடு கும்பிடக்

குனிந்த மக்களின்

உயிர்ப்பலிகளா

இந்த கடவுள்களின்

நைவேத்யங்கள்?

நான்கு முறைகளில்

மறைத்துச்சொன்னாலும்

சாதி மதங்களில் இந்த‌

சாவு மந்திரங்களா

மக்களுக்கு?

இதோ 

மக்களின் "கால் தடங்கள்"

மிதி மிதியென்று

மத்தளங்கள்

வாசிக்கின்றன.

இந்த அடிமைச்சங்கிலிகள்

உடைந்து நொறுங்கட்டும்.

மக்கள் நாயகம்

மலர்ந்து ஒளிரட்டும்!


_______________________________________

சொற்கீரன்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக