ஹேலுசினேஷன் 2
______________________________________
சொற்கீரன்
உனக்குள் ஒரு பிரம்மையை
ஏற்படுத்திக்கொள்.
அந்த குமிழிக்குள்
உன் பிருந்தாவனத்தை
நிறுவிக்கொள்.
உன் புல்லாங்குழலின்
சங்கீதத்துக்குள்
வண்ண வண்ண ஒலிக்கற்றைகளை
பீலிகளாய் நடவு செய்து கொள்.
உன்னை மொய்க்கும்
பட்டாம்பூச்சிகளே
உன் கோபிகைகள்.
அந்த எண்ணச்சிறகுகளுக்கும்
சிறகுகளாய்
சிறகுகளுக்கும் மேல் சிறகுகளாய்
உன் கற்பனையின்
"ஃப்ராக்டல் ஜியாமெட்ரி"யை
உடுத்துக்கொள்.
உள்ளக்குழம்பியங்களின்
உணர்ச்சிப்போர்வைகளில்
உன் நிறங்கள் பளிச்சிடலாம்.
இது உன் தனிமைக்கூடம் தான்.
உன் வானம் இது.
விண்மீன்கள் வேண்டுமென்றால்
உன் கவிதைக்களைக்கொண்டு
கண் சிமிட்டிகொள்.
கடவுளை நீ தேட வேண்டியதில்லை.
உனக்கு நீயே கடவுள்.
உனக்கு நீயே அரக்கன்.
இங்கு யாருக்கும் கடவுளைப்பற்றிய
"அநாடமியெல்லாம்" தேவையில்லை.
உன் வக்கிரங்களே
அவதாரங்கள்.
ஒரு மனிதன் இன்னொரு
மனிதனை வாகனமாக்கிக் கொள்ளலாம்.
அவன் வசம் இவன் ஆவதோ
இவன் வழி அவன் செல்வதோ
இங்கு புராணங்கள் ஆகி விடும்.
மீற முடியாத சொற்கள்
உன்னை மூடிக்கொள்ள
விரைந்து வரும்.
பக்தி எனும் அந்த "ம்யூக்கஸ்"
அந்த சொற்களின் இறுக்கத்தில்
உன்னை ஒரு
கூட்டுப்புழுவாக மாற்றிவிடும்.
குமிழிக்குள் குமிழிக்குள்...குமிழிக்குள்
எப்போது
உன் சிறகை அசைத்துக்கொண்டு
உடைத்து வருவாய்
என்பது உனக்குத்தெரியுமா?
விஞ்ஞானம் எனும்
இயற்கையின் உந்தமே இங்கு "மொமெண்டம்"
அந்த உந்தமும் அது
தாங்கிய இடமும் தான்
அலையின் கருப்பைக்குள்
குவாண்டமாய்
இந்த பிரபஞ்சத்தைக்கூட
சவ்வுப்படலமாய்
இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்கிறது.
இதற்குள்
உன் கணிதமும்
சோழி விளையாடுகிறது.
தாயம் விழுந்து விட்டதா?
நுண்கணித நுங்கு வெளிக்குள்
ஹோமாலஜி
குழைந்து வரும் சமன்பாட்டுக்குள்ளும்
நீ
தீர்வு தேடுகின்றாய்.
இருட்டின் ஒளிக்கீற்று
நீயே..
ஆம் நீயே தான்.
உன்னைத்தவிர வேறு யார்
இங்கே?
______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக