திரைகள் விலகட்டும்.
___________________________________
அது
எதுவாகவும் இருந்து விட்டு
போகட்டும்.
அதற்கென்ன இப்போ?
ஏன் இந்த
கொட்டு மேளங்கள்?
எதற்கு இத்தனை புகை மூட்டம்?
குடம் குடமாய் நெய்?
மூட்டை மூட்டையாய்
சுலோகங்கள்?
இவை யாருக்குமே
புரியத்தேவையில்லை
என்ற
மூளை மரத்துப்போன
நெனப்பு மிதப்பு எல்லாம்.
இந்த உச்சரிப்பு எச்சில்களில் தான்
உங்கள் தீட்டுகள் எல்லாம்
கழியும்
என்று ஒரு மூடாக்கு உபதேசம்.
ஓ!மக்களே!
அறிவு
நாக்கு சுருட்டி
அடி வயிறு கலங்கி
இரைச்சல் கூட்டம்
எழுப்பவது அல்ல.
ஏன்?எதற்கு? எப்படி?
என்ற தீக்கொளுந்துகள்
எரிந்து கொண்டே
இருக்க வேண்டும்.
சிந்தனை வெப்பம்
அவிக்கப்படுவது அல்ல.
சீற்றங்கள்
மழுங்கிவிடப்படவா
இந்த சவத்துப்போன
நூற்றாண்டுகள் கழிந்தன?
திரைகள் விலகட்டும்.
இருட்டுகளின் கன்னத்தில்
விழட்டும் அறைகள்.
வீழட்டும் மயக்கங்கள்.
_______________________________________________
சொற்கீரன்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக