இழுத்துக்கொண்டே இருங்கள்.
__________________________________________
என்ன சொல்லி என்ன பயன்?
என்ன எழுதி என்ன பயன்?
விண்குழல்கள் எனும்
யு ட்யூபுகள்
"பகீர்கள்" கிளப்பியும்
பயனில்லை.
எதிர் அறிக்கைகள்
எதிர் செயல்பாடுகள்
எல்லாவற்றையும்
ஒன்றுமில்லாமல் செய்துவிட
அவர்களுக்கு
எத்தனை எத்தனை
ஆயுதக்கிடங்குகள் இருக்கின்றன.
முறையற்ற ஓட்டுக்களால்
முக்காலே மூணுவீசம்
நாற்காலிகள் அவர்கள் வசம்.
மிச்சம் இருக்கும் இடங்களில்
நேர்மை நாடகங்கள்.
இவர்கள் வெற்றியில்
எதுவும் செய்ய முடியாது.
தேர்தலில் தில்லு முல்லு என்று
சொன்னால்
உங்கள் வெற்றி எப்படி வந்தது?
என்று
பம்மாத்து செய்து கொள்வார்கள்.
இத்தனை ஆண்டுகள்
தில்லு முல்லு ஆட்சி என்றால்
அதை அப்படியே
அழித்துத் துடைத்து
இழந்த "ஜனநாயகத்துக்கு
இழப்பீடு வந்து விடுமா என்ன?
அவ்வளவு தான்!
"உண்ட சோத்துக்கெல்லாம்
ஊறுகாய் கிடையாது"
மேலும்
அவிழ்ந்து கிடக்கும் நெல்லிக்காய்
மூட்டையால்
எதுவும் நடந்து விடப்போவதில்லை.
உட்குத்துகளும்
உள் பூசல்களும்
உள் அவலங்களும்
நம் உள் நோக்காடுகளும்
சிந்தனை வக்கிரங்களும்
வெளி உலகத்துக்கு
என்ன தெரியும்?
உலகிலேயே பெரிய
ஜனநாயக நாடு எனும்
பெரிய்ய்ய்ய்ய நசுங்கிப்போன
காலி டப்பா தானே
நாம்.
பெரும்பான்மை சாதிகள்
புளுகு புராணங்களின்
புழுக்களாய் நெளிந்து
கொண்டிருக்க
ஆதிக்க செலுத்தும்
"தந்திர அறிவுஜீவிகளோ"
பொம்மலாட்டம்
நடத்திக்கொண்டிருக்கின்றன.
சரி..சரி..
இங்கே ஏன் இன்னும்
சும்மா சும்மா
பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
அதோ
அந்த முரட்டுத்தேருக்கு
வடம்பிடித்து
முழக்கம் சொல்லி
இழுத்துக்கொண்டே இருங்கள்.
________________________________________________
செங்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக