புதன், 14 மே, 2025

"ஆற்றுப்படை"


"ஆற்றுப்படை" 

________________________________________



தமிழன்பன் அவர்களே!

இங்கே சோறு எங்கே விக்கும்

என்று

பசியோடு சாப்பாட்டுக்கடை பற்றி

கவி காளமேகம்

தெருவிலே ஒரு சிறுவனிடம் கேட்டார்.

"இது தெரியாதா தாத்தா?

தொண்டையிலே தான்"

என்று சிரித்து கொண்டே 

அவன் சொல்லிவிட்டு போய்விட்டான்.

புலவர் விக்கித்துப்போனார்.

தமிழ் கூட விக்கியிருக்கும்

அன்றைய அந்த‌

"விக்கிப்பீடியா"வுக்கு.

நமக்கு முகவுரை எழுதியனிடமே

முடிவுரை எப்போது அப்பா

எழுதுவாய் என்று தானே

இந்தக்கடவுளிடம் 

இந்த மக்கள் கேட்பார்கள்.

அந்த முடிவுரை பற்றிய‌

ஒரு "மயான காண்டத்தை"

வெகு அருமையாய்

கவிதையில் அரங்கேற்றி இருக்கிறீர்கள்!


"சுட்ட பழம் வேண்டுமா?

சுடாத பழம் வேண்டுமா?"


"அந்த வாழைப்பழம் எங்கடா?"

"அதாண்ணே இது.."

என்று சிரிக்காமல் சொல்லி

நம்மையெல்லாம் இன்றும் சிரிக்க‌

வைத்துக்கொண்டிருக்கும் 

சொல்லின் நுட்பங்கள் 

நமக்கு "மின்னலடிக்கும்"

திருப்பு முனைகள் தான்.

வாத்தியாருக்கு தெரிந்த செங்கோல்

அந்த பிரம்பு தானே!

அதைக்கொண்டு

எமனைப்பார்த்து எங்கே

கையை நீட்டு என்பார்.

இதற்கு மேலும்

அந்த இறுதிப்பயணத்து

"நுனிக்கொம்பர்"தாண்டி

"அஃது இறந்து ஊக்கின்"

என் செய இயலும்?

கணக்கு வாத்தியார் என்றால்

"இன்ஃபினிடியை அதற்கு மேல்

பெருக்கினாலும் இன்ஃபினிடி தானே

என்பார்.

நமது இலக்கிய 

எட்டுத்தொகைகளுக்கும்

எட்டா தொகை அல்லவா

இறப்பு?

"நாள் என ஒன்றுபோல் காட்டி

உயிர் ஈரும்" அந்த "வாள்"

எவ்வளவு கூர்மையாயினும்

அதையும் 

"வா எட்டி உதைக்கிறேன்"

என்று

"தமிழை" சாணைபிடித்த

கவிஞனும் இங்கே உண்டு.

ஆறும் இல்லாமல் நீரும் இல்லாமல்

நீங்கள் எழுதிய அற்புத‌

"ஆற்றுப்படை" இது!


_____________________________________________

சொற்கீரன்.

( "இறப்பு" எனும் நிகழ்வு பற்றிய‌

ஒரு அருமையான கவிதையை

ஈரோடு தமிழன்பன்பன் அவர்கள்

எழுதியிருக்கிறார்கள்.

நகைச்சுவையோடு அவர் தந்த 

அந்த‌"இறவச்சமே" எனது இந்த கவிதை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக