"தத்துவார்த்த சிந்தாமணிகள்"
_______________________________________________
நிஹிலிசம்
எக்சிஸ்டென்ஷியலிசம்
இந்த இரண்டு
முகம் பார்க்கும் கண்ணாடிகளை
எதிரெதிரே நிறுத்திக்கொண்டு
நாம்
கழுத்தை முறுக்கித்திருகி
பார்த்துக்கொண்டிருப்போம்.
முதற்சொல்
வாழ்க்கையா? பிறப்பா?
அதெல்லாம் ஒன்றும் இல்லை.
மூச்!
எதையும் நீ கேட்க வேண்டியதில்லை.
முதல் சொல்லில்
டி ஏ எஸ் ரத்தினம் பொடியை
ஒரு சிட்டிகை உறிஞ்சி விட்டு
இப்படியெல்லாம்
சொற்களில்
தும்மல் போட்டுக்கொண்டே
இருக்க வேண்டுமா?
சரி! இரண்டாவது சொல்!
நீயே ஒரு கடல் தோண்டு.
ஒரு படகும் துடுப்பும்
உன்னிடம் இருப்பதாய்
உவமி!
இப்போது பயணப்படு.
சரி தான்.
இதற்கு பேசாமல்
இறகுகளையெல்லாம்
உதிர்த்துக்கொண்டு
ஈசல்களாய்
துடித்து துடித்துப் பற..
என்று சொல்லிவிடுவது தானே.
முன்னது
"வெறுமையம்"
பின்னது
"நிழல்மம்"
வாழ்க்கைக்கு தத்துவம் வேண்டும்
என்று
யார் அழுதார்கள்?
கருப்பையில் "நியூராலிங்க்"
லிங்க் சொடுத்து விட்டது.
மடிப்பொறியை
கிளிக்கிக்கொண்டே இருங்கள்.
வாயுவேகம் மனோ வேகம் என்று
நம் மண்டைக்குள் கூட
குவாண்டத்தின்
"சைக்கமோர் சிப்" இருக்கிறது.
அது
இந்த அண்டத்தின்
"ஒமேகா" குறியீட்டையே
புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறதாமே!
அப்புறம் எதற்கு இந்த
"தத்துவார்த்த சிந்தாமணிகள்?"
_________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக