சனி, 17 மே, 2025

கடல்

 



கடல் என்ன‌

வற்றாத பனை மரமா?

அந்த பனை மரங்களுக்குள்

ஒடுங்காத ஓலை ஒலிப்புகளா?

நீங்கள் கீறி கீறித்தந்த‌

ஓலைச்சுவடிகளில்

சிந்து வெளிகளின்

சிப்பிகளும் முத்துக்களும்

இந்த உலகின் இமைகள்

விரிய விரிய 

விதிர் விதிர்த்துப்போகின்றன.

"கல் பொரு சிறு நுரை..."

என்று மட்டும் தானே

அவன் அன்று கீறினான்.

அதில் காதலின்

இத்தனை ரத்த விளாறுகளா?

உங்கள் சொற்பின்னல்கள் கொண்டு

தலை பின்னி விடுகிற‌

இத்தனை தமிழ் நுட்பங்கள் கண்டு

தமிழ்ச்சிறுமி தன் எலிவால்

சடை அழகில்

சொடுக்கி நிற்கும் 

புயல் அழகுகள் கண்டால்

பவணந்தி முனிவர்களும்

தண்டிகளும்

இலக்கணத்துக்கு இமயம்

இலக்கியம்

இலக்கியத்துக்கு இமயம்

இலக்கணம் 

என்று

அடுக்கிக்கொண்டே போவார்கள்.

பாணினிகள் கூட‌

கை கட்டி வாய் புதைத்து

காணாமல் போவார்கள்.

தொல்காப்பியர்

வெர்ஷன் ஒன்று இரண்டு மூன்று..என்று

வாசல்கள் திறந்து 

வைத்துக்கொண்டே இருப்பார்!

தமிழ்க்கருவூலமே!

தமிழன்பனே!

கடல்களையெல்லாம்

தேடித்தேடி

கொட்டாங்கச்சியில்

ஊற்றி விளையாடும்

தமிழ்ப்பெருங்கடலோடு

என்ன விளையாட்டு உங்களுக்கு?

தமிழுக்கு சொற்ளின்

மாணிக்கப்பீலிகள்

சொருகி சொருகி வைத்து

அந்த‌ செம்மொழி மகுடத்திற்கு

ஒரு வெண்கொற்றக்குடை

ஏந்தும் விளையாட்டா?

உங்கள் குடைநிழல் போதும் எங்களுக்கு.

வேறு படைநிழல்கள்

எதற்கு இங்கே?


________________________________________________

சொற்கீரன்


(17.05.2025 ல் 

ஈரோடு தமிழன்பன் அவர்கள் 

எழுதிய "கடல்"பற்றிய‌

கவிதையின் கரையோரம்

உலா போன போது 

எழுதிய என் கவிதை இது)


________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக