சனி, 5 அக்டோபர், 2024

டைனோசார்கள் நம் தோள்களில்...

 

டைனோசார்கள் நம் தோள்களில்...

__________________________________________



எதுவும் தோன்றவில்லை.
பழக்க வழக்கங்கள் எனும்
கொடும் டைனோசார்களை
இன்னும் நாம் தோள்களில்
சுமந்து கொண்டிருக்கிறோம்.
இதில்
மனிதம் அன்பியல்
என்றெல்லாம்
நாம் ஒரு ரோஜாப்பூவை
உருவகமாக கையில்
ஏந்திக்கொண்டிருக்கிறோம்.
அந்த மிருகங்களின் உறுமல்களே
நம் மந்திரங்கள் ஆகிப்போயின.
அந்த மதத்தை தூக்கிப்பிடிப்பதே
நம் உயிர் நோக்கம் எனும்
அறியாமையில் ஊறிக்கிடக்கும்
மனிதர்கள் கையில்
எத்தனை எத்தனை
நுட்பமான "ஏ ஐ"க்கள்
இருந்தாலும்
உடைந்து போன சிலேட்டுகளில்
அன்று நாம் கிறுக்கிக்கொண்டிருந்த‌
அரைவேக்காட்டு எழுத்துக்களும்
எண்ணங்களுமாகவே
உலா வருகின்றன.
வண்ண வண்ணமான
இந்த லேசர் விளக்குகளில்
அந்த அறியாமையின்
எலும்புக்கூடுகள் தான்
மதவெறித்தீயை மத்தாப்பு
கொளுத்திக்கொண்டிருக்கின்றன.
இது மொத்தமாய் தடம்புர‌ளும்
வண்ணம்
அறிவியல் அம்புகள்
இன்னும் கூர்மையாகத்தான்
மழை பொழியத் தொடங்கிருக்கின்றன.
மனிதம் வெற்றி பெறும்.
இந்த மங்கலான மதச்சித்திரங்கள்
மறைந்தே போகும்.
அறிவே!
உன் ஆயுதமே
மத அரக்கர்களின்
கைக்கு மாறிய அந்த‌
ஆயிரம் அணுகுண்டுகளையும் கூட‌
அழித்து சாம்பலாக்கும்.
______________________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக