செவ்வாய், 1 அக்டோபர், 2024

ஒரு சரித்திரம்

ஒரு சரித்திரம்

_________________________________


என் வயதா?

ஆயிரம் ஆண்டுகளுக்கும்

மேலாய் 

இலைக்குடை கவித்து

நின்ற மரம் சொன்னது.

எனக்கும் எண்ணிக்கைகளுக்கும்

சம்பந்த மில்லை.

கோடிக்கணக்காய் பறவைகள்

இங்கு பாடம் சொல்லும்

பாடம் கேட்கும்.

சூரியன் வந்து என்னிடம்

தயங்கி தயங்கிக்கேட்டது.

நிழல் வேண்டுமாம்.

அதுவே கொடுத்துவிட்டு

அதுவே கேட்கிறதே.

பாவம் என்று

கொடுத்து விட்டேன்.

தொலந்தது.

ஒண்ட‌

வந்தது மக்கள் கூட்டம் அல்ல.

கோடரிக்கூட்டம்.

இப்போது வெயில் துணி விரித்து

வெயிலையே

காயப்போட்டுக் கொண்டிருக்கும்

விந்தை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இங்கே வந்து

பறவைகள் எச்சம்போடும்

என்று 

காத்திருக்கிறேன்.

மழையும் என் இலைக்குடையை

திருப்பித்தரும் 

என்று

காத்திருக்கிறேன்.

_______________________________________________

சொற்கீரன்


இந்தக் கவிதையை "அருமை" என்று ஈரோடு தமிழ்ன்பன்

பாராட்டியமைக்கு நான் எழுதிய நன்றி மடல்.


மிக்க நன்றி.ஈரோடு தமிழன்பன் அவர்களே.

ஒரு சொல்லில் அந்த சொல்
கோடி கோடி ஒளியாண்டுகள்
செல்லும் தடத்தையெல்லாம்
பதிவு செய்து தரும்
பத்தரை மாத்துத் தங்கத்தமிழ்ச் செல்வரே
நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக