வெள்ளி, 11 அக்டோபர், 2024

கனவுக்குள் ஒரு கனவு

 


கனவுக்குள் ஒரு கனவு

________________________________________

சொற்கீரன்.


படு

என்று கண்களை அழுத்தியது.

கண்களை திறக்க முடியவில்லை.

இடுக்கு வழியாக பார்த்தால்

பிம்பங்கள் இழை பிரியாமல்

மசமசத்துக்கிடந்தன.

ஆழ்துயில் கடலில் 

அமிழ்ந்து விட்டேன்.

அப்புறம்

திரைப்படம் ஓடியது.

திரைப்படமா?

யார் எடுத்தார்கள் அந்த‌

படத்தை?

எவனோ எடுத்தான்.

எதற்கோ இங்கு காட்டுகிறான்.

அது தான் சொல்லிவிட்டார்களே

தூணிலும் இருப்பான்

துரும்பிலும் இருப்பான் என்று.

சரி தான்.

நரசிம்மம் வாயைப்பிளக்கிறது.

குடல் நீள நீள 

ரத்தம் வழிய வழிய‌

கோபத்தின் ரங்கோலியெல்லாம்

குரூரச்சித்திரங்கள்.

ஆனால் எப்படி

இவர் இங்கே வந்தார்?

வெண்தாடியும் கைத்தடியுமாய்..

பின்னாலேயே

விஷ்ணுவும்....

"பின்ன என்ன தான் 

செய்யச்சொல்றீங்க

எத்தனை அவதாரம் எடுத்து

சூசகமாக சொன்னாலும்

உங்களுக்கு

அறிவு வேலை செய்ய மாட்டேங்குது.

கடவுள்..பிரம்மம் 

அது இதுண்ணு

இந்த ஏழை பக்தர்களை

பாடா படுத்துறீங்க.

அதெல்லாம் ஒண்ணுமே இல்லடா

முண்டங்களா

(கடவுளே இப்படி திட்டுறார்னு

நெனைக்காதீங்க...)

இல்லவே இல்லைன்னா

இல்லவே இல்லை தான்.

அதத்தான் இவர் ஆணித்தரமா

சொல்றார்ல..

ஸ்லோகம் சொன்னாத்தான் ரிஷியா?

இவர் பகுத்தறிவுச் செல்வம்டா

ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி இவரே தான்.

இப்ப நான் சொல்றேண்டா

இல்லவே இல்லைடா

அது உங்க பயப்பிரம்மம்டா..

கேக்கபோறீங்களா இல்லையா....

கடவுள் கர்ஜித்தார்

நரசிம்மமாய்...

...........


"ஆமாம்...என்ன இது?"

தாயார் தொட்டு எழுப்பினார்.

பாற்கடல் உறக்கத்திலுமா கனவு?

பெருமாள் முறுவலித்தார்.

........

"போதும் தூங்கினது.

இன்னும் கெளம்பலையா?

நாழியாச்சே...

அந்தக்கோயிலுலே இன்னிக்குத் தானே

உங்கள் சத்பிரசங்கம்.."

என்னத்தச்சொல்றது

பகவான் தூக்கமே இன்னும்

கலையலே"

பௌராணிகரும்

முறுவலித்தார்.


__________________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக