வெள்ளி, 9 நவம்பர், 2018

கா..கா..கா...

கா..கா..கா...
====================================================ருத்ரா
(ஒரு உருவகக்கவிதை)




ஒரு காக்கை கரைந்து
கொண்டேயிருக்கிறது
சென்னைக்கோட்டையின்
அந்த உச்சியிலிருந்து.

அதன்
கத்துதலை தொடர்ந்து
காக்கைகள்
ஒவ்வொன்றாய்
வர ஆரம்பித்தன.

சில மின்கம்பத்தில்.
சில அந்த கட்டிடத்தின்
மற்ற முனைகளில்.

இன்னும் சில‌
ரெக்கைகளை அடித்துக்கொண்டு
வந்து கட்டிடத்தை
அப்பிக்கொள்ள‌த்தொடங்கின.
மின்கம்பத்து வயர்களில் எல்லாம்
கொத்து கொத்துக்களாய்
வந்து நின்றன.
இரைச்சல்கள் இரைச்சல்கள்..
காக்கைகளின் பாப் மியூசிக்
அங்கே அற்புதமாய் இருந்தன.
அவ்வபோது
வானத்தில் லேசாய் உறுமும்
இடிமுழக்கம்
ட்ரம் ஓசைகள் ஆயின.
காக்கைகள் ஆயிரக்கணக்கில்.
சுற்றி முற்றி பார்த்தால்
காக்கை ஏதேனும் இறந்து கிடக்கிறதா
என்று பார்த்தால்
ஒன்று கூட அப்படி எதுவும்
இறந்து அங்கே தொங்கவில்லை.
அப்படி என்றால்
ஹிட்ச்காக் படம் "பெர்ட்ஸ்"
அங்கே ஓடிக்கொண்டிருப்பது போல‌
எப்படி இப்படி
காக்கைகள்
குவிந்துகொண்டேஇருக்கின்றன?
ஏதோ அவற்றின் இனத்தில்
ஒன்று
இறந்து தான் போய் இருக்கவேன்டும்?
எங்கே அது?
தூரப்பார்வையில்
அந்த சென்னைக்கோட்டைக்கட்டிடத்தை
உற்றுப்பார்த்ததில்
எனக்கு ஒரு தோற்றம்.
அந்தக்கட்டிடம்
ரெண்டு பக்கமும்
கம்பீரமாய் பறக்கும் ரெக்கை மாதிரி
நீண்டு பரந்து நிற்குமே !
ஆனால்
இப்போது அது அப்படி இல்லையே.
ரெக்கை பிய்ந்து
தலையும் தொங்கிக்கிடப்பது போல்
தெரிந்தது.
உள்ளே களையில்லை
ஒளியும் இல்லை.
உயிரும் இல்லை தான்
போலிருந்தது.
இவ்வளவு காக்கைகளும்
அந்த கட்டிடத்தில்
அது மரித்துக் கிடப்பதை
புரிந்துகொண்டனவா?
இத்தனைக்கூட்டமும்
இத்தனை இரைச்சல்களும்  கூச்சல்களும்
நாளைய விழியல்களா?
இவை இரங்கல்களா? எழுச்சிகளா?
அந்த காக்கைகள்
ராட்சசப்பறவைகளின் கூட்டமாய்
தன்  இறக்கைகளைக்கொண்டு
வானத்தையே மறைத்தது.
போக்குவரத்து உறைந்து போய் இருந்தது.
காவலர்களின் முயற்சியால்
கொஞ்சம் கொஞ்சம் அது
நகர ஆரம்பித்தது.
காக்கைகளின் கூட்டம் மட்டும்
கருங்கடல் அலைகள் போல‌
எங்கு பார்த்தாலும்
விம்மி விம்மி பறந்தன.
"..கா கா கா.."
"கா..கா..கா"
"கா..கா..கா"
அந்த அவலங்களின் கூச்சல்களுக்கு
அந்த சபையில்
மேசை எல்லாம் தட்டத்தெரியாது.

===============================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக