சனி, 10 நவம்பர், 2018

மணல் சிற்பம்

மணல் சிற்பம்
==================================ருத்ரா இ பரமசிவன்

தூரத்து அலைகளின் ஒலி
கூர்மை தீட்டி
உளி எடுத்துக்கொடுத்தது.
அவன் விரல்களும் கைகளும்
மணலுக்குள் வாய்பிளந்து
ஊட்டியது..
உருவத்தை.
வடிவத்தின் செதில்களை.
அவள்
எப்படி சிரித்தாள்?
எப்படியோ சிரித்தாள்!
மணலின் வைரத்துளிகளோடு
அவன் போராடினான்
அந்த சிரிப்பை உயிர்ப்பிக்க.
அந்த சிரிப்போடு
கொத்தாக குலையாக‌
முந்திரிக்கொடியின் பின்னல் வைத்து
இனிப்பின் மின்னல் தெறித்ததே!
கன்னம் குழிய...
அவள் சிரித்தாளே!
பௌர்ணமிக்குள்
கருநாவல் பழம் எனும்
அமாவாசைப்பிஞ்சை பதித்தது போல்..
அந்த குழிக்குள்
கோடி சூரியன்கள் இருட்டாகின.
பளிங்குத்தருணங்கள்
வழுக்கி வழுக்கி உருண்டன.
அதை எப்படி கொண்டுவருவது?
மணல் சிப்பங்களில்
அவன் அளைந்து கொண்டேயிருந்தான்.
"கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பாளம்"
விளையாடிக்கொண்டிருந்தான்.
அது பிடிக்குள் வரவில்லை.
அலை இரைச்சல்கள்
அவன் அருகில் வந்து வந்து
 நண்டுக்குழிககளாய்
வதம் செய்தது
புற்று நோய்போல் பொதிந்து நின்று
கற்பனையால்
கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றது.
சிரிப்பு "உருப்"படவில்லை.
சிற்பத்தின் மற்ற உருவம்
அழகை அப்படியே
அள்ளிக்கொண்டு வந்து விட்டது.
என்  சிற்பம்.
அவன் கணிப்புக்குள்
அது
இன்னும் சிரிக்க ஆரம்பிக்கவில்லை.
முழுமை அடையவில்லையே!
அவள் சிரிப்பு இன்னும் விடியல் காட்டவில்லையே.
என் சிற்பத்தை வெறித்துப்பார்க்கின்றேன்.
அந்த கண்கள் கொள்ளை அழகு.
கடல்கள் எல்லாவற்றையும்
குடித்துத்தீர்த்துவிடுகிற‌
தாகம் அதில் தெரிந்தது.
கன்னங்கள்...
மூக்கின் கூர்மை..
உலக சரித்திரங்களையே
தடம் புரட்டிவிடுகின்ற
ஒரு கோணம் அதில் புதைந்து கிடப்பதாய்
எனக்குள் பரபரத்தன அலைகள்.
கரும்பு வில் ஏந்தியவன் கூட‌
துரும்பாய் அல்லவா இங்கு கிடப்பான்!
ஆனால் இதழ்கள் உருவாகும் இடத்தில்
அந்த சிரிப்புக்கு ஏங்கும்
ஒரு மூளித்தன்மையே
அங்கு மூடியிருந்தது.
அதைக்கண்டதும்
குபீரென்று ஒரு சிரிப்பு என்னிடம் பொங்கியது.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு..
இந்த அண்டமே இரு உதடுகளாய் பிளந்து
சிரிப்பது போல்...அந்த சிரிப்பு.
ஆயிரம் ஆயிரம் விஸ்வரூபங்களையும்
விழுங்கித்தீர்த்துவிடும் சிரிப்பு..
அந்த சிற்பத்தில் என் கால்கள் அளைந்தன.
சிற்பம் சிதைய கலைத்து
நர்த்தனமிட்டுக்கொண்டே
நான் சிரித்துக்கொண்டே இருந்தேன்.
என் இந்த சிரிப்பு
"அந்த சிரிப்பை" தேடியது..

இப்போது ஒரே மணல் வெளி..
"ஏய் நில்! எங்கே ஓடுகிறாய்?
வா!மறுபடியும் விளையாடலாம்..."

அவள் சிரிப்பு மட்டும் கேட்டது.
இப்படி
என் சிற்பத்தைக் கலைத்துவிட்டு
கல கலவென்று சிரித்துக்கொண்டு ஓடுவாளே!
என் இதயங்களின் ரத்தங்களுக்குள் எல்லாம்
நயாகராவாய் பொழிந்து கொண்டேயிருக்கும்
அந்த சிரிப்பு.
எந்த உளி கொண்டு செதுக்குவது?
எங்கே அவள்?
ஆண்டுகள் ஓடி ஓடி உருண்டு விட்டன.
அலைகள்
ஹோ ஹோ ஹோ வென்று
சிரிக்கின்றன.

======================================================
15.02.2015






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக