வியாழன், 1 நவம்பர், 2018

வெற்றி மாறனின் வெற்றி

வெற்றி மாறனின் வெற்றி

=============================================ருத்ரா இ பமசிவன்



வெற்றிமாறன்

திரைப்பட நிழற்காட்டில்

இது வரை பறித்ததெல்லாம்

"வெற்றி"க்கனியே தான்.

இதுவும் அப்படியொரு

அருங்கனி.

வெறி துரோகம் கொலை

ரத்தவர்ணம்

இவற்றையும் மீறிய‌

சமுதாயத்தின்

ஒரு உள் நிறம்

மனிதம் மீது தூரிகையாய்

ஒரு அற்புதம் படைத்திருக்கிறது.

இது இயக்குனரின் முழுவெற்றி.

ஒரு தனுஷ் அல்ல‌

ஒன்று ப்ளஸ் நாலைந்து

தனுஷ்கள்

பரிமாணங்கள் காட்டியிருக்கிறார்கள்.

அந்த நாலைந்து தனுஷ்கள்

அமீர்லிருந்து ஆரம்பிக்கிறார்கள்.

"ராஜன்"அமீர்

நடிப்பில் "ராஜ ராஜன்"அமீர்!

பருத்திவீரனில்

அமீரின் இயக்கம்

கலைஞரைக்கூட

கண்ணீர் கசிய வைத்திருந்ததை

நாம் அறிவோம்.

அமீரிடமிருந்து

ஒரு நடிப்புப்புதையலை

தோண்டியெடுத்துக்கொடுத்த‌

வெற்றியும் கூட அந்த "மாறனுக்கே".

சமுத்திரக்கனி,கிஷோர்,டேனியல் பாலாஜி,பவன்

அத்தனை பேரும்

நடிப்பின் பிழம்பாய் வெற்றிமாறனின்

வார்ப்புகளில் பிதுங்கி வழிகிறார்கள்.



கதையின்

திடீர் திடீர் திருப்பம் தான்

இந்தப்படத்தின் கதாநாயகன்.

சமுதாயம் எப்போதும்

புன்னகைத்துக்கொண்டிருக்கும்

"மோனாலிஸா" ஓவியம் அல்ல.

அதை அப்படியே

சுவரில் திருப்பி மாட்டிவைத்து

காட்டியிருக்கிறார் வெற்றிமாறன்.

கிரேக்க இதிகாசத்தில்

தலைமயிர் ஒவ்வொன்றும்

நாகப்பாம்பாய் சீறும்

அரக்க அழகியான‌

"மெடுஸா"வின் ஓவியமும் அதுதான்.


ஆனால்

மெடுஸாவின் ரத்தவாடை வீசும்

கொலைகளின் இதிகாசத்தையும் கூட‌

அதனுள் நுட்பமாய்

மோனாலிஸாவின்

ஒரு புன்னகையைக்காட்டி இருக்கிறார்.

அதுவும் ஒரு

எகத்தாளப்புன்னகை...

அதன் உட்குறிப்பு இதுவே.

எத்தனை காலம் இன்னும்

இந்த ரத்தச்சகதியில்

அமிழ்ந்து கிடக்கப்போகிறாய் தமிழா!

நெய்தல் என்பது

பிரிவும் பிரிவு சார்ந்த திணை அல்ல.

அது தமிழும்

தமிழ் சார்ந்த "பாரதமும்" அல்லவா.

பரதவர் எனும் அந்த தமிழ்க்குலத்தின்

நீட்சி தானே

பாரதவர் எனும் இந்தியர்.

இதற்கு ஆராய்ச்சியின் படிக்கட்டுகள்

நமக்கு வழி காட்டும்.

"தமிழா

நீ என்றைக்கு விழித்துக்கொள்ளப்போகிறாய்?

உன் வில்லும் புலியும் மீனும்

இந்தச் சேற்றுக்குள் தான்

மிதி பட்டுக்கிடக்கிறது."

வடசென்னையில் அவர் காட்டிய

நுட்பம் அது.

"வெற்றி"மாறனின் "வெற்றியும்" இதுவே.


சமுதாய நரம்புக்குள்

ஓடுவது எப்போதும்

புனிதநதியின் புஷ்கரணி அல்ல.

பழி வாங்குவதும்

பழி தீர்ப்பதும்

ரத்தச்சுழிகள் நிறைந்ததுமான‌

காட்டாறும் அது தான்.

சமுதாயமுரண்களின்

வர்ணங்களைத்தான்

வெற்றிமாறன் வெற்றிகரமாக‌

தீட்டியிருக்கிறார்.



===================================================ருத்ரா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக