திங்கள், 22 ஆகஸ்ட், 2016

பாய்





பாய்
=========================================================
ருத்ரா  இ பரமசிவன்




என் உள்ளே
வெங்காயக்குகை.
உரித்தேன்
ஆயிரம் ஆயிரம் வானம்.
சந்திர மண்டலத்து சதை பிய்ந்து இருந்தது.
ஆர்ம்ஸ்ட்ராங்கின் கால் நகம் பட்டு.
பழனி போகரும்
அங்கிருந்து மண் எடுத்து நெய்து
ஞானப்பழத்துச் சின்னப்பயலுக்கு
கோவணம் கட்டினார்.
"ஃபான்டாஸ்டிக் வாயேஜ்" நாவல் மாதிரி
என் சிறுகுடலுக்குள் சென்றேன்.
நுரையீரல் பூங்கொத்துகளில்
பிருந்தாவன் நந்தகுமாரன்களை
மயில்பீலி கிரீடத்துடன்
நடமாட விட்டேன்.
மூளையின் ஆப்லாங்காட்டா
அப்புறம் நியூரான் சினாப்டிக் ஜங்ஷன்
பர்கிஞ்சே செல்களோடு
கிசு கிசுத்து என் முந்தைய‌
ஐயாயிரத்து ஒன்பதாம் ஜன்மாவில்
திளைத்துக்களித்தேன்.
கடைசியாய்
குண்டலினியின் பிரம்மரந்த்ரத்தின்
நுனிக்கொம்பர் ஏறி
"அஃது இறந்து ஊக்கி..."


"போதும் எழுந்திருங்கள்.
ட்ரான்செண்டென்டல் தியானம் முடிந்தது.
போகும்போது
ஃபீஸ் பாக்கி இல்லாமல் கட்டி விட்டுப்போங்கள்.
மகரிஷி ஹோலோகிராம் போட்ட‌
ரசீது வாங்கிக்கொள்ளுங்கள்"

நான் அந்த‌
குட்டிச்சதுரப்பாயை
சுருட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு புறபட்டேன்.

===================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக