திங்கள், 22 ஆகஸ்ட், 2016

இது ஒரு விளையாட்டு.



இது ஒரு விளையாட்டு.
========================================================================ருத்ரா இ பரமசிவன்


நேரே
என்னை நோக்கி வந்தாய்!
கைகளில் ஒற்றை ரோஜாப்பூ!
கண்களிலோ உலகத்து
மொத்த ரோஜா வனங்களின்
மொத்தப்பூக்களின்
அருவிக் கசிவுகள்.
என் உயிர் உருவிய‌
மாணிக்கக்கதிர்கள்.
ஆனால் 
என்னருகே வந்ததும்
என்னையும் தாண்டி நிற்கும்
அந்தப்பெண்ணிடம்
ரோஜாவை நீட்டுகிறாய்.
"இந்தாடி நேற்றே கேட்டாயே
வாங்கிக்கொள் பூவை!"
நான் 
பொடி பொடியாகி
காற்றின் துகளாகி
எங்கோ கரைந்து போனேன்.
நான் எங்கே தொலைந்து போனேன்
என்று எனக்கே தெரியவில்லை.
"ஏண்டி!
உன் ஆளை இப்படிக்கொல்லுகிறாய்.
நான் எப்போ உன்னிடம் 
பூ கேட்டேன்?
அவன் இதயத்தில் வைக்க வேண்டிய 
பூவை
அவன் காதில் வைத்து விட்டாயே!"
"விடுடி!
சும்மா! ஜாலிக்குத் தான்!"
நான் அவள் உயிர்த்தூசியாய்
அவள் காதோர‌
கூந்தல் சுருளில் மறைந்து தான் 
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
என்பதை
அவளும் கேட்டுக்கொண்டிருப்பாள்.
விடுங்கள்.
இது ஒரு விளையாட்டு.
இந்தப்போட்டியில்
எங்கள் இருவருக்கும்
"தங்கம்" தான்!

==========================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக