நண்பர் ஒருவர்
"ராட்சச தண்ணீர்க்குழாய்
பைப்பு"களில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
சமுதாய சீரழிவுச் சித்திரங்களை
காட்டும்
புகைப்படம் ஒன்றை
பதிவு இட்டிருந்தார்.
அந்த வட்டம்
நமக்கு சிந்தனை வட்டம் தான்.
அதுவே வாழ்க்கையாகிப்போன
அந்த "மரத்து"ப்போன
சித்திரம் தான் நம்
சமுதாய சித்திரவதை.
அதில் வாழ்பவர்களின் அன்றாட
"அடுக்கு மாளிகை"யாக
அது இருந்த போதிலும்
அப்படி "சிதை அடுக்கும்" நம்
சில்லரைக்கண்ணீர்த் தாகங்கள் தான்
இன்னும் நம்
"இந்து மகா சமுத்திர"ச் சிதலங்கள்.
கே ஏ அப்பாஸ் என்ற புகழ்பெற்ற
நாவலாசிரியரின் அந்த அக்கினித்துளி
"சஹர் அவுர் சப்னா"என்ற
திரைப்படமாக நம்
நெஞ்சை வருடிக்கொண்டிருக்கிறது.
இதில் என்ன செய்யமுடிந்தது
நமக்கு?
நம் எரிமலையை இப்படி
படமாக
அட்டைப் படப்பொம்மையாக
"விருது" அரிப்புகளை மட்டும்
சொறிந்து கொடுக்கும்
மனச்சோர்வின் இலக்கியங்களாக
மட்டுமே "கொலு" வைத்திருக்கிறோம்
என்பது
சோகத்திலும் பெரும் சோகம்.
___________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக