கடமுடா நானூறு
_______________________________________
சங்கத்தமிழை எப்படி
நினைவு கூர்ந்து கொண்டே இருப்பது?
எட்டித்தொகை பத்துப்பாட்டில்
எனக்கு அந்த
"மலைபடுகடாம்"மிகவும் பிடித்தமானது.
அந்த ஓசை அழகுக்குள்
தமிழனின் பனை ஓலைகள்
சரசரப்பது மட்டும் அல்ல
மலைக்குன்றுகளே
குட்டி யானைகளாய் விளையாடும்
கட முடா ஓசைகள் கேட்பதாய்
ஒரு மன வெளி மயக்கம்.
இந்த புருடாவெல்லாம் வேண்டாம்
என்கிறீர்களா?
சரி இருக்கவே இருக்கிறது
நம் அன்றாட அரசியல் கடமுடாக்கள்.
....................
இன்று என்ன
சவடால் விண்குழல் ஓசைகள்?
ஆம் அது தான் யூ ட்யூப்
குழாய் ஒலிப்பெருக்கிகளின்
ஓசைப்புயல்கள்.
"நீயும் நானுமா?"
என்று துரோக அகவைகள்
கேட்க ஆரம்பித்து விட்டன.
பதவி மூட்டைகளும்
பணத்தின் பிணங்களும்
கவுச்சி வாசனையோடு
மேலே தொங்க விட்டு
ஆரியக்கூட்டங்கள்
கூத்துப்பட்டறைகளை
ஆரம்பித்து வீட்டன.
இனி தெற்கில் நடக்கும்
கிஷ்கிந்தா காண்ட
சண்டைப்பிராண்டல்களில்
"தமிழ் முகம்"
ரத்தவிளாறுகளில்
சிதையத்தொடங்கி விடும்.
சிந்து வெளியும் கீழடியும்
அந்த சனாதனக்கிடங்கில்
வீழ்த்தப்பட்டு கிடக்கும்
இந்த நிலையில்
இனி தமிழ் வீச்சு
மூச்சுப்பேச்சற்று
மார்ச்சுவரியில்
விறைத்துக்கிடக்கும்.
தமிழன் நாகரிகம்
இந்த கழுமரத்து ஒலி ஒளிக்
காட்சிகளில்
மரண நிழல்களாய்
மத்தாப்பு காட்டிக்கொண்டிருக்கும்.
_________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக