வியாழன், 31 ஜூலை, 2025

கோபண்ணாக்களின் கோபம்.

 

கோபண்ணாக்களின் கோபம்.

_______________________________________________


டில்லி "தீன் மூர்த்தி"இல்லத்தில்

"நேரு" என்று

ஆசிய ஜோதி...மனிதருள் மாணிக்கம்

என்றெல்லாம் 

வெளிச்சத்தின் இமயமாக நின்றவரை

வெறும் கூழாங்கற்களாய்

சிதறடித்து இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதை

கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை

என்று கலங்கியிருக்கிறார்

திரு கோபண்ணா அவர்கள்.

"வயிறெரிகிறது!" 

"என்று பெருமூச்சிறைத்தார்."

என்கிறது அந்த பதிவு.

முகநூல் என்று பெயர் தாங்கிய‌

முகங்கள் அற்ற முகவரிகளின் தொகுப்பில்

இருப்பது 

கவலைச்சுருக்கங்களும்

அவலங்களின் ஆற்றாமைகளும் தானே.

இது கோபண்ணாவுக்கு மட்டும் தான்

நமக்கென்ன என‌

மரத்துப்போன பாரதத்தின்

அந்த‌

"ஒளி படைத்த கண்கள்" எல்லாம்

சாதி சம்பிரதாயங்களில்

மற்றும் 

சாமி கும்பிடல்களில்

மடிந்து ஒடுங்கிக்கிடக்கும்

அவலங்களில் இருந்து

"சாம்பல் பறவைகள்"

என்றைக்கு சட சடக்கப்போகின்றன.

லட்சம் லட்சம் புகைப்படங்கள் கூட‌

இனி அந்த "ஃபாஸில்"மிச்சங்களில்

நசுங்கிக்கிடக்கலாம்.

வயிறு பசித்துக்கிடப்பது கூட 

துயரம் அல்ல.

வரலாறு நொறுங்கிக்கிடப்பதே

அவலத்திலும் அவலம்.

இதன் ஆவேசங்கள் இல்லாமல்

அவிந்து கிடப்பது

இன்னும் கோடூரத்திலும் கொடூரம்.

"என்று தணியும் இந்த‌

சுதந்திர தாகம்?"

பாரதி பாடிய இந்த‌

"நொந்தே பாரதம்"

தண்டவாளமே இல்லாமல்

தடம் தேடி 

ஓடிக்கொண்டே இருக்கிறது.

________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக