திங்கள், 15 ஜனவரி, 2018

தராசுகளின் தராசு

தராசுகளின் தராசு
=============================================ருத்ரா

ஒரு உயரமான சிகரத்தில்
தராசு.
கீழே தீர்ப்புகள் தோற்றுவிட்டால்
அவை மேலே தான்
வரவேண்டும்.
ஏனெனில் அது
தராசுகளின் தராசு.
"நுனிக்கொம்பர் ஏறினார்   அஃதிறந்து ஊக்கின்"
என்ற வரிக்கு இங்கு இடமில்லை.
ஈ காக்காய் ...ஏன்  கழுகுகள் கூட
பறந்து வர முடியாத உயரம் அது.
நீதியின் உச்சாணிக்கொம்பில்  தான்
நம் ஜனநாயகத்தின்
தூக்கணாங்குருவிக்கூடு
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது.

நம் மனசாட்சி
நம் மானிடநீதி
நம் சமுதாய நீதி
நம் உரிமைகள்.
நம் கடமைகள்.
நம் நாடு
எல்லாமே
இங்கு தான் கண்ணியமாய்
மகுடம் சூட்டிக்கொள்கிறது.
நான்கு நீதிப்பேரரசர்களின்
மன சாட்சி
மிகவும் உறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாய்
இந்த நீதியின் சிகர‌ விளிம்பில் நின்று
அறிவிப்பு செய்திருக்கிறது.
நாட்டின் ஜனநாயகம்
கீழே விழுந்தால் உடைந்துபோகும்
கண்ணாடி என்பதாலும்
அது
சில விருப்பு வெறுப்பாளர்களால்
பந்தாடப்படுவதாலும்
அதை நாங்கள் தெரியப்படுத்தா விட்டால்
நீதி எனும் உண்மையின் ஆன்மாவே
சிதைந்து போய்விடும் என்பதாலும்
எங்கே அதற்கு நாங்கள் மௌன சாட்சிகளாய்
மடங்கிப்போய் விடுவோமோ
என்ற திடுக்கிடும் உணர்விலும்
நாங்கள்
காமிராவின் முன்
ஊடகங்களின் முன்
பிரகடனம் செய்கிறோம்.
தலைமை நீதிப்பேரரசரை
நீக்குவதற்கு நாங்கள்
வரிந்து வரிந்துகட்டிக்கொண்டு வரவில்லை
என்பதும்
அதை இந்த தேசமே மேற்கொள்ளட்டும்
என்பதுமே எங்கள் நிலை.
இந்த ஊசிமுனைஇடத்தில்
ஒரு புள்ளியளவு கூட‌
நாங்கள் அங்கே இங்கே
நகர முடியாது என்பதையும்
உங்களுக்கு அறிவிக்கின்றோம்.

குஜராத் தானே
இந்தியாவின் அரசியல் காந்தஊசி காட்டும்
மாநிலம்.
அங்கு "எக்ஸ்டரா ஜுடிஷியல் கில்லிங்"
நடந்திருப்பதாக
பத்திரிகைகள் நமக்கு
முகம் காட்டுகின்றன.
அதை விசாரிக்கும் நீதிப்பேராசர்
அரசியல் நாடகங்களில்
காட்டப்படும் திடீர் காட்சி மாற்றம் போல்
"கார்டியாக் அர்ரெஸ்ட்" என்று
அறிக்கை தரப்பட்டு மறைந்து போகிறார்.
குடும்பத்தினர்
அது கொலை என ஐயம் கொண்டு
புகார் செய்கின்றனர்.
அதை விசாரிக்கும் நீதிப்பேரரசர்களுக்கு
ஒரு தர வரிசைப்பட்டியல் இருக்கிறது.
அந்த நடைமுறை
தலைமை நீதிப்பேரரசரின்
தனிப்பட்ட விருப்பத்துக்குள்
போய் விழுகிறது.
அவரின்புனித நூல் (குட் புக்ஸ்)
பக்கங்களில் தான்
இந்த நாட்டின் தேரை ஓட்டும்
கிருஷ்ணரும் அர்ஜுனரும்
இருக்கின்றனர்.
அது ஒன்றும் பகவத் கீதைத் தேர்  அல்ல.
மர்ம யோகிகள் சிலர்
எழுதும் அந்த மகாபாரதத்திற்கே
தெரியும்
யார் ஆளனும்
அதற்கு
யாரெல்லாம் "மாளணும்"?
என்று.
அதற்கும்
பதினெட்டு பருவங்கள் உண்டு.
இப்போது ஆட்சி பர்வம்
ரத்த ஆறு ஓடும் யுத்த பர்வம்
பின்னே வருகிறது.
மாட்டு மாமிசங்களை வைத்து
ஒத்திகை நடந்தும் முடிந்து விட்டது.

அந்த அர்ஜுனரும் கிருஷ்ணரும்
வேறு யாரும் அல்ல!
அந்த இருவர்கள் தான்!

இப்போது புரிகிறதா!
அந்த நீதிப்பேரரசர்கள்
ஏன் நடுநடுங்கிப்போனார்கள் என்று.

அதெல்லாம் சரி.
இதெல்லாம் ஒன்றுமில்லையாம் .

"ய ஸ்டார்ம்  இன் ய டீ கப்" தானாம்.

சும்மா
"டீ கப்பில் ஒரு ஈ கெடக்கு"
சரிதாம்ல ...ஈயை எடுத்துப்போட்டு
உறிஞ்சுல ."

"ஈயை எடுத்தா டீ (TEA)  இருக்காதே.

"கடி"ஜோக்கு சொல்லும்
அறிவு ஜீவியே
உனக்கும் காத்திருக்கு
"கும்பி பாகமும் கிருமி போஜனமும்"


================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக