திங்கள், 15 ஜனவரி, 2018

ஞாநி

ஞாநி
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍====================================ருத்ரா


ஒரு தாடிமீசை.
சமஸ்கிருத ஸ்லோகங்கள்
இவையெல்லாம் வேண்டாமே
"ஞானி" என்று
போட்டுக்கொள்வதற்கு
என்பதாய்
ஒரு தர்க்கத்தின் உருவகம்
ஞாநி.
சமுதாய எழுச்சி என்பது
மத்தாப்பு போல்
எரிந்து அவியும் கிளர்ச்சி அல்ல.
அலங்காரம் அற்ற‌
சொல் அடுக்குகள் போதும்.
அதில் தெறிக்கும் கேள்விகள் போதும்.
கேள்விகளே விடைகளாய்
கொப்புளிக்க வைக்கும்
கேள்விகள் அவை!
ஏதோ
கி மு கால கட்டத்து
சாக்ரடீஸ் ப்ளேட்டோக்களின்
அறிவின் விளாறுகள்
நிறைய நிறைய‌
அவர் பத்திகளில்
கனன்ற போதும்
சமூக நீதியும்
சமூக நியாயமும்
"சீரியல் பல்பு"வெளிச்சங்களின்
புள்ளிவிவரக் க‌சிவில்
கீற்றுகள் காட்டுவது மூலம்
நவீன வரலாற்றுப்பக்கங்களை
பொட்டில் அடித்தாற்போல்
நமக்கு காட்டும்
ஒரு சித்தாந்த மேதை அவர்.
இவர் விளக்கு ஏந்தியபோது மட்டுமே
மற்றவர்களின்
அசிங்கங்கங்கள் அம்பலமாகிவிடும்.
இது
இவரது எழுத்து விளக்கின்
குற்றம் அல்ல.
பத்திரிகைகள்
யாரையாவது
தாக்கவேண்டுமென்றால்
இவர் பேனாவுக்குள்
ஒளிந்து கொள்வார்கள்.
ஏனெனில்
பத்திரிகைகளுக்கு
அந்த ஊழலை விட‌
அந்த ஊழல்காரர்களின்
உருவங்கள் கிழிக்கப்படவேண்டும்
என்பதே நோக்கம்.
ஆனால்
ஞானி
எப்போதுமே
நியாயத்தின் ஊசி முனை.
இந்த தந்திர ஆட்டங்கள் ஏதும்
ஆடத்தெரியாத‌
உண்மைத்தீயின் சுடரேந்தி.
கடைசியாக‌
குருமூர்த்தி அவர்களைப் பற்றி
அவர் சந்தோஷமாகவே
விமரிசித்திருக்கிறார்.
அவர் வெளிப்படையாகவே
சங்க பரிவார "கதாயுதத்தை"
தூக்கிக்கொண்டு நின்று
அம்பலமாகி விட்டார் என்று.
இதுவே
ஞானியின் நிப்புமுனை
எவ்வளவு கூரியது
என்று காட்டும்.
இவருக்கு கண்ணீர் அஞ்சலி எழுதினால்
வேடதாரிகளே
கொஞ்சம் எட்டி நில்லுங்கள்
என்று தான் விமரிசனம் வைப்பார்.
சிறுநீரகக்கோளாறுகள்
சில கோடீஸ்வரர்களுக்கு
வெறும் சில்லறைத்தொந்தரவுகள் தான்.
இவரை
காவு கொண்ட அந்த வியாதி
மௌனமாய் அவரை
தின்று முடித்ததைக்கண்ட போது
அது நமக்கு
ஒரு தாங்கவொண்ணா அதிர்ச்சியே!
ஆனாலும்
இவர் இழப்பு
சமுதாய அலசல்கள்
இல்லாத காலி பக்கங்களைத்தான்
இனி நமக்கு காட்டும்....
இந்த பத்திரிகைகள்
ரீம் ரீமாக அச்சில்
ஓடிக்கொண்டிருந்தபோதும்.

================================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக