திங்கள், 15 ஜனவரி, 2018

ஒரு பொழிப்புரை

ஒரு பொழிப்புரை
=========================================ருத்ரா


கீழே நான் எழுதிய சங்கநடைப்பாடலுக்கு ஒரு  பொழிப்புரை.

________________________________________________________________

நடுகல் பீலியும் நார்அரி கலமும்
===============================================ருத்ரா

நடுகல் பீலியும் நார்அரி கலமும்
நுரையத் தரூஉம் நறவக் காட்சியான்
வேட்டுவன் யான் கூற்றம் கொண்டு
போயினும் ஓர் ஊழ்  வந்து மீட்டிய காலை
விண்ணின் இழிந்து ஓர் உயிருள் புகு தர
வேந்துகடன் ஆற்றும் நசைமிக்கூர‌
அகலம் ஆயிரம் அம்புகள் துளைக்க‌
வெண்ணிப்பறந்தலை வீழ்படுத்தாங்கு
விண்ணும் வெளியும் பரந்தேன் மன்னே!
என்னே பாழ் இது? ஈனப்படுகுழி
வீழ்ந்தார் ஈண்டு. சிறைய படர்ந்த‌
சிலம்பும் புலம்பும்.எவன்செயும்?
இணரிடை ஊரும் அம்புல் எறும்பாய்
மீள் தர ஆங்கு எவ்விடையாயினும்
தோற்றிடும்  யான் நம் அருமைச்செம்மொழி
காத்திடும் வல்லரண் படைகொடு கிளர்பு.
எத்துணை வரினும் அமர்கடாம் உய்த்து
வெல்குவன்  வெல்குவன் அதன்கண்
 உருகெழு பிறப்பின் மண்சுவை தமிழ்ச்சுவை
நனிகூர் களிகொள யாண்டு ஒருநாள்
மீள்குவன் மீள்குவன் காண்மின் மன்னே.

=====================================================

வீரம் செறிந்த மன்னர்கள் போரில் இறந்த பின் அவர்களுக்கு
நடுகல் இட்டு மலர்கள் சூடி மயிற்பீலி அணிவித்து மதுவும் படைத்து
நினைவு கூர்வதுண்டு.அதைக்குறித்து அருமையானதொரு பாடல்
படித்தேன். "அதியமான் நெடுமான் அஞ்சி"யின் நடுகல் பற்றி மனம் வெதும்பி ஔவையார் பாடியது. அதில்
"நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறுகலம்..." (புறம் 232)
என்ற வரிகள் மிகவும் நுட்பமும் அழகும் செறிந்து இருப்பதாக எனக்குப்பட்டன.அதன் உந்துதலில் உடனே நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை தான் மேலே நான் எழுதியிருக்கும் பாடல்.
இது நம் தமிழின் வீழ்ச்சிகண்டு மனம் வெதும்பி ஒரு மன்னன்
மறுபிறவி எடுத்தாவது அது எறும்பின் பிறவியாக இருந்தாலும் சரி
தமிழ் மண்ணைக்காப்பேன் என்று புறநானூற்று வீரம் கொப்பளிக்க‌
அவன் கூறுவது போல் எழுதப்பட்ட பாடல்.

(இதன் விரிவான பொழிப்புரை தொடரும்)

===================================================ருத்ரா
27.12.2012

பொழிப்புரை
=============


வீரர்கள் போர்க்களத்தில் மறைந்தபோதும் அவர்கள் நினைவாக கல் நட்டி மயிற்பீலி சூடி தெள்ளிய மதுவை கலத்தில் பெய்து நுரைக்க நுரைக்க அதைப்படைத்து வணங்கும் நினைவின் மணம் கமழும் காட்சிகள் பெற ஆவல் கொண்டு யானும் அந்த போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து இறந்து போனேன்.ஆயினும் ஏதோ ஒரு ஆற்றல் எனும் ஊழ் வந்து எனக்கு மீண்டும் உயிர் கொடுத்தது.எனவே விண்ணிலிருந்து இறங்கி ஒரு உயிருள் புகும் ஆசையால் ஒரு மன்னன் ஆனேன்.மீண்டும் போர்க்களம் புகுந்து என் அகலமான மார்பில் ஆயிரம் அம்புகள் துளைத்து அந்த வீரம் செறிந்து மண்ணின் அகன்ற வெளியில் போர் புரியவே எனக்கு மிகவும் விருப்பம்.அப்படியே வீரமுடன் பொருது என் உயிரைப்போக்கி அந்தக்காற்றிலும் வெளியிலும் விரவும் படி உலவினேன்.

என்ன இது ? நம் தமிழ் நாடு நம் மொழி இழந்த பாலைவனம் எப்படி ஆனது?
எப்படி இந்த ஈனப்படுகுழியில் வீழ்ந்தது?

இங்கே பறக்கும் வண்டுகள் கூட துன்பத்தை ரீங்காரம் செய்கின்றன. இவ்வீழ்ச்சியினைத் துடைக்க இன்னொரு பிறவிக்குள் நுழைவேன். அது
அந்த பூக்களின் கொத்துக்களிடையே ஊரும் சிற்றெறும்பாய் இருப்பினும்
அந்த அழகிய புல்லில் தோன்றும் நான் எப்படியாயினும் நம் அருமை செம்மொழி காக்க ஒரு எறும்புப்படையாய் வல்லரண் அமைத்து கிளர்ந்து
வீறு கொண்டு எழுவேன். ஒற்றுமையும் உறுதியும் மிக்க அப்படை போல எழுந்து எத்துணை இடர்கள் உற்றபோதும் அப்போர்கள் புரிந்து உயிரைஈந்து  வெற்றிகள் நிறுவுவேன்.அதன் பின் மீண்டும் தமிழ் மண்ணின் தமிழ்ச்சுவை அறிய ஒரு நாள் பிறப்பெடுத்து வருவேன்! வருவேன்! காண்பீர்.காண்பீர்!

=====================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக