ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஒரு நிழல்

ஒரு நிழல்
==========================================ருத்ரா

அந்த அறுபத்தொன்பது வயது
முதியவன்
தன் முண்டாசை எடுத்து
முகத்தைத் துடைத்துக்கொள்கிறான்.
அந்த முகத்தில் தான்
எத்தனை சுருக்கங்கள்.
நம் தேசப்படத்து நதியின்
நெளியல் சுழியல்கள் போல்.
அவன் வேர்வை
அந்த சுருக்கங்க‌ளில் எல்லாம்
நிறைந்து வழிந்து ஓடியது.
இப்படி
இந்த நாட்டின் நதிகள் எல்லாம்
என்றைக்கு
ஒரே நாளமாய் பரவி
நம் "ஜெய்ஹிந்தை"
நீராக்கி
விதையாக்கி
பயிராக்கி
பயன் தரும் என்று தெரியவில்லை!
தாய் மண்ணே வணக்கம் என்று
தமிழில் பாடினாலும்
வந்தேமாதரம் என்று
தேசியமொழியில்
சிலிர்த்துக்கொண்டாலும்
வறட்சியில் மண்ணே கருகி
உழவின் திருமகன்கள்
எத்தனை எத்தனை பேர்
தற்கொலைகளில்
நம் கிராமியப்பொருளாதாரத்தை
நமக்கு
பாடம் சொல்லிப்போயிருக்கிறார்கள்?
கார்பரேடிஸம் எனும்
ஆக்டோபஸை நுழையவிட்டு விட்டு
இவர்கள்
இங்கு ஏதோ அரக்கன் வதம் பற்றி
குங்குமச்சேற்றில்
ரத்தவண்ணம் காட்டி
பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அதோ
அந்த அரசாங்க கட்டிடத்தில்
மூவர்ணம் அழகாக அசைகிறது
ஒரு உச்சிக்கம்பத்தில்.
அருகில்
ஒரு நீர் நிழலில் கூட‌
அது அழகாக இருக்கிறது.
ஆம்
மிக அழகாக
அந்த நிழல்
அந்த சாக்கடை நீரில் கூட!

======================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக