வெள்ளி, 19 ஜனவரி, 2018

ரஜனியின் ஆன்மீகம்

ரஜனியின்   ஆன்மீகம்
==========================================ருத்ரா

ஒரு கனத்த புத்தகத்தின்
பக்கங்களுக்கிடையே
ஒரு கரப்பான் பூச்சி
நசுங்கி லேமினேட் செய்யப்பட்டது
போல் ஆயிற்று.
அதன் கூழ்சதையும்
மற்றவையும் காணாமல் போனபின்
இறகுகளோடும்
முட்கால்களோடும்
அந்த காகிதங்களுக்கு இடையே
ஃபாஸ்ஸில் போல் கிடந்தது.

அது ஒரு உயிரின் பதிவா?
அது மீசையை மீசையை
ஆட்டிக்கொண்டு வரும்
நகர்வுகளின்
உறைந்து போன வடிவமா?
அதற்கும் மனம் இருந்து
எதையாவது கற்பனை செய்திருக்குமா?
அதன் மூளைப்பதிவுகளின்
மிச்சம் அந்த காகிதத்தில்
அச்சேறியிருக்குமா?

இது போல்
வாழ்க்கைப்பாறாங்கல்லில்
நசுக்கப்பட்ட‌
மனித உயிர்த்துடிப்பின்
அசைவுகள்...
அந்த மூளையின்
அந்த மன அடுக்கு மண்டலங்களின்
வீச்சுப்பதிவுகள்...
குறிப்பிட்ட‌
அந்த மனிதனின் "மேனரிசங்கள்"..
அவன் ஏதாவது
ஒரு "தர்பார் ராகத்தை"
அமர்த்தலாக‌
இசைக்கும் கம்பீரங்கள்.....
அவன் படித்தநூல்க‌ளின்
அறிவுப்பிழம்புகளின்
படிமச்சாறுகள்...
பூர்வ உத்தரமீமாம்சங்களின்
ஞானப்பிசிறுகளோடு
மார்க்ஸ் எங்கல்ஸின்
தர்க்கங்களும்....
டையலெக்டிகல் மெடீரியலிஸம் எனும்
முரண்பாடுகளையெல்லாம்
முரண்பட்டு
ஒரு முடிவுக்கு வரும்
சங்கம சித்தாந்தங்களின்
சிந்தனை அலை நொதிப்புகளும்...
கண்ணுக்குத்தெரியாத‌
"க்ளோ" எனும் வெளிச்சக்கீற்றுகளும்..
ஆகிய எல்லாம் ஆன‌
ஒரு பதிவிறக்கமே
ஆத்மா என்பது.
ஒரு "ஆள்" இப்படி
சாறு பிழிந்த வடிவமாய்
நமக்குத் தெரியும்
ஆள்மா எனும் தமிழ்ச்சொல்லே
வடமொழிக்குள்
ஆத்மா என தாவியது.
ஆத்மி என்றால் "ஆள்" தானே.
மனிதனே விலங்கிலிருந்து மாறுபட்டு
இயற்கையை "ஆளத்தொடங்கியவன்"
அவன் "ஆள்களில்" பெரும் ஆள் (பெருமாள்)
ஒருவனைத்தான்
இன்னும் தேடிக்கொன்டிருக்கிறான்.
கோவில்களில்
நின்ற வண்ணமாய் (நெடுங்கோடு)
கிடந்த வண்ணமாய் (கிடைக்கோடு)
ஜ்யாமெட்ரிகளில்
கிடக்கும் அந்த (பெரும்)ஆள்
இன்னும்
அந்த மனித தேடலின் "கார்ட்டூன்" தான்.
பக்தியின் திரை மறைப்பில்
எல்லாம் புகை மூட்டமாயும்
ஸ்லோக இரைச்சல்களாயும்
இன்னும்
வெட்டு குத்து களின்
சாதி சமய ஆர்ப்பாட்டங்களாயும்
நமக்கு அந்த பெருமாள்
தெரியாமல் தெரிந்து கொண்டிருக்கிறான்.
பிரம்மம் என்றாலும்
இப்படி ஒரு
குழப்பத்தின் பிம்பமே.
அந்த "ஆள்மியம்" அல்லது ஆத்மிகம்
என்பது
மனிதனின் ஒட்டுமொத்த
ஹோலோகிராஃபிக் இமேஜ்!
மனிதனுக்கு மனிதன் காட்டும்
பரிவும் நேசமுமே அது.
ஆனால் அது எப்படி
மனிதனை மனிதன்
அடிமைப்படுத்தும்
அல்லது தாழ்மைப்படுத்தும்
அசிங்கம் ஆகமுடியும்?
அந்த ஆத்மிகம்
மனிதன் தலையை
மனிதனே கொய்யும்
வெறியாய் எப்படித் தீப்பிடிக்க முடியும்?
ஆத்மிகம் என்று
பூடகமாய்
மனித அறிவுக்கு
பூட்டு போடும் செயல்களை
மதம் பளபளப்போடு காட்டுகிறது.
ஆயிரம் சாதிகளை வைத்துக்கொண்டு
ஆன்மிக பூமி என்று ஆனந்தப்படுவதில்
என்ன அர்த்தம்  இருக்க முடியும்?
ஜிகினா டாலடிக்கும்
சினிமாப்பூச்சோடு
அந்த "ஆத்மிக"த்தை
வெறும் மதத்தின் ஆத்மிகமாக‌
உடுக்கை அடித்துக்கொண்டிருப்பதே
நடிகர் ரஜனியின்
தற்போதைய திருப்பணி!
மனித அறிவின் ஊற்றுகளே !
அந்த "தேக்கத்தில்"போய்
கலந்து காணாமல் போய்விடாதீர்கள்.
அரசியலில் விழித்திரு.
அறிவில் பசித்திரு.
நம்
தமிழில் எப்போதும்
உயிர்த்து இரு!

=================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக