வெள்ளி, 26 ஏப்ரல், 2019

அங்கே ஓர் இடம் வேண்டும்.

அங்கே ஓர் இடம் வேண்டும்.

=====================================கல்லிடைப்பரணன்.


தமிழை ஒலித்தால்

காதுகளில் கம்பளிப்பூச்சிகள்.

தமிழ் பேசினால்

கசப்பு தான்.

தமிழ் எண்ணினால்

சோறில்லை.

தமிழ் எழுதினால்

இடமில்லை.

தமிழில் கவிதை

கொலவெரி தான்.

தமிழை மொழியென்றால்

நாடு கடத்து.

தமிழ் இனமென்றால்

தமிழனே

தமிழனுக்கு கல்லறை.

அது ஏன்?

தமிழ் வரலாறு

புழுக்களின் வரலாறு.

தமிழ் ஆத்திகம்

தமிழும் நாத்திகம்.

தமிழில் ஆங்கிலம்

தமிழே ஆங்கிலம்.

இனிக்கிறது என்று

தமிழில்

சொல்வதாகத்தான் சொன்னான்

இவன் பெயரை

வடமொழியில்!


கல் தோன்றி மண் தோன்றுமுன்

வந்தவன் என்று

நைந்து கிடக்கிறான்

கல் குவாரியிலும்

மண் குவாரியிலும்.



உலகம் தமிழில்

ஒரு நாள்

இமை உயர்த்தும் என்று

நம்புவோம்.


அந்த‌

"ஞாயிறு" தோன்றும் வரை

திங்கள் முதல்

சனி வரை

இந்த

பஞ்சாங்கத்தில்

படுத்துக்கிடப்போம்.


உறுமுவது மட்டும்

உரிமைகள் ஆகுமா?


தமிழை

உருவாக்கும் முன்னே

தமிழை

கருவறுக்கவோ

இங்கு

இத்தனைக்கூச்சல்?



உலகம் எல்லாம்

கப்பல் விட்டவன்

ஒரு தீவில்

பிணங்களாய் குவிந்தான்.


அது ஒரு தாகம் என‌

கவிதைகள் சொன்னான்.

தமிழில் கூட

குண்டுகள் உமிழ்ந்து

தமிழ் உயிர்கள்

குடித்திடும் கொடுமை

எப்படி வந்தது?

மூவேந்தர் என்று

வில்லும் அம்பும்

ரத்தம் தின்றபின்...தமிழ்ச்

சத்தம் மட்டுமே

இங்கு மிச்சம்.


"தண் தமிழ் வேலி தமிழ் நாட்ட கமெல்லாம்

நின்று நிலைஇப் புகழ்பூத்தல் அல்லது

குன்றுதல் உண்டோ....."




பரிபாடலில் எட்டாம் பாட்டு இது.

புலவனின் முகம் தெரியவில்லை.

முகவரியும் இல்லை.

ஆனால் "புறத்திரட்டு"எனும்

நூலில்  மட்டுமே

மேற்கோள்  காட்டப்பட்ட  பாடல்.

பாடலும் முழுமையில்லை.


இடிந்த கோட்டையின்

உருவகமாய்

தமிழின் புலம்பல் வரிகள்

கேளா இடமில்லை.




எங்கே தமிழ்?எது தான் தமிழ்?

அங்கே எனக்கு

ஓர் இடம் வேண்டும்!




=====================================================
கல்லிடைப்பரணன்....08/02/2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக