திங்கள், 29 ஏப்ரல், 2019

எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்...?

எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்...?
==========================================================ருத்ரா

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே...
என்று குதிரையைப்பிடித்துக்கொண்டு நடந்து
நாமக்கல் கவிஞரின் வரிகளை
சொடுக்கிவிட்டுப்போனாரே
அவரும் அரசுக்கட்டிலில் உட்கார்ந்து
ஏமாற்றிவிட்டுப் போய்விட்டார்.
ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்களின் மீது
சினிமா காட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

வறுமைக்கு மருந்து இது.
அறியாமையின் திறவுகோல் இது
விடுதலை மூச்சின் வெளிப்பாடு இது
இன்னும் என்னவெல்லாமோ பாடி ஆடி
எழுபது ஆண்டுகளுக்கும் மேல் தொலைத்துவிட்டோம்.

முதலில் ஒரு பெட்டியை வைத்தார்கள்.
அதில் பல வர்ணங்கள். பல சின்னங்கள்
எல்லாம் வைத்தார்கள்.
எல்லாவற்றிலும் இருந்தது "நான்கு வர்ணம்"

பொது மானிட நீதி  சித்தாந்தங்கள்
துளிர்த்தன.மலர்ந்தன..
ஆனாலும்
தறிகெட்ட தனிமை சுதந்திரமே
மக்களையெல்லாம்
ஒரு அபினிக்கடலில் தள்ளியது.
சாதி மதங்கள் அமிழ்த்தியதில்
மானிட நேயம் மறைந்தே போனது.

மனித உழைப்பை உறிஞ்சும்
அட்டைவர்க்கத்தினரே
ஆளும் வர்க்கம் ஆனார்கள்

சினிமா வந்தது.
புரிதலின் இமைகள் திறந்தன.
ஆனாலும்
பொருளாதார அடிப்படை சூத்திரம்
அடியில் போனது.
மனிதனை மனிதன்
சுரண்டுவது மட்டுமே
இங்கு சட்டம் ஆனது திட்டம் ஆனது
இன்னும் எல்லாம் ஆனது.

தொலைகாட்சிகள்
மனிதர்களை மாடுகள் போல்
வீடுகளின்
அந்த முற்றத்துத்தொழுவத் திலேயே
கட்டிப்போட்டன.
செல்ஃ போன்கள்  வந்தன.
ஆயிரங்கண் இந்திரன் போல
அதில் ஆயிரம் காமிராக்கள்
முளைத்திருந்தன.
அதனால்
இங்கு எங்கும் ஆபாசமே
சமுதாயக்"கண்"ணோட்டம் ஆகிப்போனது.

மனிதனை மலர்த்தும் அரசியல்
இங்கே தடம் மாறி
குப்பை ஆனது கூளம் ஆனது.
ஊழல் லஞ்சம் இங்கே
வாழ்க்கையின் முறைகள் ஆனது.

ஜனநாயகம் இங்கே
லஞ்ச நாயகம் ஆகிப்போனது.
அறிவியல் உயர்ந்தது என்று
கணினி ப்பெட்டிகள்
இவர்களை ஆள வந்தது.
ஓட்டுகள் இங்கே நோட்டுகள் ஆனதே
நம் விலையுயர்ந்த ஜனநாயகம்.

முடிவுகள் உமிழ
படுத்துத்தூங்கும் அந்த பெட்டிகளில்
எல்லாம்
மலடாகிப்போன
நம் கனவுகள் தூங்குகிறன.
மரத்துப்போன நம் சுதந்திர தாகங்களும் கூட
குறட்டைவிட்டுத் தூங்குகின்றனவே.

==================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக