வியாழன், 18 ஏப்ரல், 2019

அந்த‌ வ‌லி

அந்த‌ வ‌லி
===========================================ருத்ரா

"அம்மா!"
வீறிட்ட‌
அந்த வலி
கசக்கிப் போட்ட காகிதத்தில்
வந்த கவிதை நான்.

அந்த துடிப்பில்
ஒரு துண்டாய்
துள்ளி விழுந்தவன் நான்.

அறுபடாத நூல்
எனும்
வம்சத்தை
நூற்றுக்கொள்ள
உன் ரத்த நாளங்களை
அல்லவா
நூற்றுக்கொடுத்தாய்.

இந்த
நூல்க‌ண்டு சிக்க‌லுக்குள்ளும்
க‌ல்க‌ண்டு இனிப்பு.
நான்
உனக்கு.

இந்தப் பிள்ளைக்கனி யமுது
எந்த பாற்கடலைக்கடைந்தும்
கிடைப்பதில்லை.

இந்த உயிர் இனிப்பில்
பிரம்மாக்கள்
பாடம் எடுத்துக்கொள்ள
படையெடுத்து வருகிறார்கள்.

அதோ பார்.
இந்த‌ இனிப்புக்கு
மொய்க்க‌வ‌ரும் எறும்புக‌ள்
யுக‌ம் நீண்ட பாதையில்
ஆயிரம் ஆயிரமாய்..

அவைக‌ளுக்கு
நாங்க‌ள் வைத்த பெய‌ர்
"கட‌வுள்க‌ள்"

=============================================
20.03.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக