செவ்வாய், 23 அக்டோபர், 2018

இலக்கணக்குறிப்பு

இலக்கணக்குறிப்பு
====================================================ருத்ரா

"கடவுள்"
இலக்கணக்குறிப்பு எழுது.
வினாத்தாள் வினவியது.
இன்னும் அது விடவில்லை
படம் வரைந்து பாகங்களைக்குறி.
பரீட்சை
பயமுறுத்தியது.
என்ன விளக்கெண்ணெய்க்குறிப்பு
வேண்டிக்கிடக்கிறது?
அவன் வீட்டில்
அம்மா விளக்கெண்ணெயில்
தீபம் ஏற்றி
அந்த மாடக்குழியை
கருப்பாய் ஆக்கி வைத்திருந்தாள்.
அவன் எழுதினான்
கருங்குழி என்று.
படம் வரையலாம்.
என்ன வரைவது?
எதை குறிப்பது?
அவனுக்கு பிக்காஸோவைத்தெரியாது.
ஆனால்
அவனுக்குள் பிக்காஸோ
கரு தரித்து விட்டார்!
ஆணா? பெண்ணா?
அவன் விடலைப்பருவத்தின்
விளிம்பின் விளிம்பைக்கூட‌
இன்னும் ஸ்பரிசிக்கவில்லை.
இருப்பினும்
மின்னல் புழுக்கள்
அவன் மண்டையில் குடைந்தன.
வட்டமா? முக்கோணமா?
வட்டத்துள் முக்கோணம்
முக்கோணத்துள் வட்டம்.
வட்டத்துள் முக்கோணம்
...........
இப்படியே நுணுக்கி நுணுக்கி
காகிதத்தை
அமாவாசையின் குழம்பாக்கி
பௌர்ணமியின் லாவா ஆக்கினான்.
அந்த காகிதத்துள்ளும்
ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு
அனல் அடித்தது.
காகிதத்தை சுருட்டி
கொடுத்துவிட்டு வந்து விட்டான்.
விடை திருத்திய ஆசிரியருக்கோ
பிரபஞ்சத்தின் ப்ளாக் ஹோல் தெரிந்தது.
படத்திலோ
சக்கரத்துள் சக்கரமாய்
ஒரு வெளிச்சம் தெரிந்தது.
.........
அவன் வகுப்பில் முதலாய் வந்தான்.
மாணவ நண்பர்களின்
கரவொலி வெள்ளத்தில் மிதந்தான்.
ஆசிரியர்
கடவுள் என்று ஆரம்பித்து
ஏதோ புரியாத சொல்மழைகள்
பொழிந்து கொண்டே இருந்தார்.
எல்லாம்
இவன் எழுதியதைப்பற்றித்தான்..
அது சரி..
யார் அந்த கடவுள்?
அதெல்லாம் தெரியாது!
அதோ
ஒரு புல் தடுக்கி பயில்வானாய்
விழுந்து கிடக்கிறான்.
யாராவது
அவனைத்தூக்கி விடுங்களேன்.

==============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக