திங்கள், 15 அக்டோபர், 2018

நம்பிக்கை

நம்பிக்கை
==============================================ருத்ரா

எழுந்துகொண்டு விட்டேன்
போர்வைக்குள்ளிருந்து உதறி.
கனவுச்சதையின் மிச்சம்
கண் இமைகளில் பனிபோல்
கவ்விக்கிடந்தது.
விழிப்பின் கத்திமுனை
அறுக்கக் காத்திருக்கிற‌து.
துண்டு துண்டுகளாய்
இந்த சுறாக்களுக்கு உணவாக.
இன்னுமா என் மீது இரவுக்கடல்
கொந்தளிக்கிறது?
பகல் நேரத்துக்கடமைகளும் கவலைகளும்
பள பளக்கிறது
"கில்லட்டின்" போல.
மறுபடியும் கால்களை உதைத்து உதறி
எழுந்திருக்கிறேன்.
ஜிவ்வென்று
என்னக்குள்ளிருந்து மனத்தின்
ஒரு அசுரக்கை முளைத்தது.
தன் முஷ்டியால்ஓங்கி ஒரு குத்து
அந்த பேய்களின் முகத்தில்.
என்ன செய்துவிட்வாய்?
என்னைத்தின்று விடுவாயா?
முடிந்தால் விழுங்கிப்பார்.
இருட்டுப்பிழம்பே
கரைந்து போ!
காணாமல் போய்விடுவாய்!
ஒரு கோடி வெளிச்சம்
என்னில் உண்டு.
நம்பிக்கை நம்பிக்கை.
ஆம்! நம்பிக்கையால்
இந்த வானம் சுருட்டுவேன்.
எல்லாம் என் காலடியில்.
"ஊழையும் உப்பக்கம்" காண்!
எப்பவோ எவனோ
எழுத்தாணி கொண்டு
ஒரு ஓலையில் கிறுக்கிவிட்டுப்போனான்.
ஆயிரம் ஆயிரம் புத்தகங்களில்
கோடி கோடி வரிகளில்
அந்த கதிர்வீச்சு பரவிக்கிடக்கிறது.
பூ .... இவ்வளவு தானா?
வரட்டும் அந்த டிராகுலாக்கள்
அவற்றை நான் உறிஞ்சித்தீர்த்துவிடுகிறேன்.
வாழ்க்கை எனும் அழகிய‌
மாணிக்கக்கல் என் மடியில்.
தூரப்போ! அழிந்து போ!
அவற்றின் முகத்தில்
காறி உமிழ்கிறது..அந்த நம்பிக்கை!
சட சடவென்று
ராட்சதத்தனமாய்
மகிழ்ச்சியின் உந்துதல்
ரெக்கைகளாய் என் மீது
இப்போது ஒட்டிக்கொன்டிருக்கிறன!

=================================================
ஒரு மீள்பதிவு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக