புதன், 10 அக்டோபர், 2018

நாடகக்காட்சிகள்.

நாடகக்காட்சிகள்.
============================================ருத்ரா


வானம்
விளிம்பு கட்டாத பருவம்.
எங்கிருந்தோ
ஒரு கீற்று மின்னல் வந்தலும்
அத்தனையும்
தேன் கீற்றுகள்.
பள்ளிக்கூட கணித நோட்டுப்
புத்தகத்தில்
பை ஆர் ஸ்கொயர் சூத்திரங்களோடு
பித்தாகோரஸ் தேற்றத்தோடு
பித்தம் கொஞ்சம் தலைக்கேறிய‌
மர்மமான வாத்ஸாயனர் சூத்திரம்.
இன்னும்
மேலே வம்படியாய்
அட்டைபோட்டுக்கொண்டு
படிக்கும் புத்தகத்தில்
நெருப்புக்கோழியாய்
புதையுண்ட தலைகள்.
........................
............................
சட்டென்று
நாடகக்காட்சிகள் மாறின.
விடலைப்பையன்
பெரிய குடும்பி ஆனான்.
காலம்
திடீரன்று செதுக்கித்தள்ளிய
குப்பை மிச்சங்களாய்
அவன் வாழ்க்கை.
பையனாய் இருந்த அவனுக்கும்
இப்போது
இரண்டு பையன்கள்
மூன்று பெண்கள்.
எல்லாம் அதே படிக்கும் பருவத்தில்
பூச்சிகளாய்
சிறகடித்துக்கொண்டிருப்பதாய்
பார்க்கிறான்.
தான் மட்டும் அன்று
பட்டாம்பூச்சியாய் இருந்தை
"கெனா"க்கண்டு
அவ்வப்போது கிறங்கிக்கிடந்தாலும்
தன்  பிள்ளைகள் மட்டும்
விட்டில் பூச்சிகளாய்
உதிர்ந்து வீழ்ந்திடுமோ
என்று பயந்தான்.

அன்று அந்த கடைக்குட்டிப்பெண்
பள்ளியிலிருந்து
வந்ததும்
செல் ஃ போனுக்குள்
புதைந்து போர்த்திக்கொண்டாள்.
அவனது விடலைப்பருவத்து
நாட்கள் அவனை
இப்போது காக்காய் முட்களாய்
குத்தின.
ஜிவ்வென்று சினம் தலைக்கேற
அந்த செல் ஃபோனை
பிடுங்கி தூர எறிந்தான்.
ஏதேதோ கத்தினான்.
சொற்கள் தெளிவில்லை.
நரம்புகள் விடைத்து முகம்
எட்டுக்கோணலாய் விரிந்து
கூச்சல்கள் இட்டான்.
அந்தப்பெண் அச்சத்துடன்
விழிகள் விலுக் விலுக்கென்று
உருண்டு சுழல விழித்தாள்:
"அப்பாவுக்கு என்ன ஆயிற்று?"

அவன் அட்டை கழன்ற புத்தகமாய்
அப்படியே தொப்பென்று
விழுந்தான்  சோஃபாவில்.
சிலுப்பிக்கொண்டிருக்கும்
இந்த தலைமுறையின் தலையை
எப்படி
சீவி சிங்காரித்து
வாழ்க்கைப்பள்ளிக்கூடத்துக்கு
அனுப்புவது?

=========================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக