வியாழன், 4 அக்டோபர், 2018

வெண்குருகு ஆற்றுப்படை

வெண்குருகு ஆற்றுப்படை

================================================ருத்ரா இ பரமசிவன்

போர்த்த கையுள் புள் இமிழ்த்தன்ன‌

பாசிலை மூடிய பல்மலை அடுக்கத்து

ப‌னிநீர் இழித‌ரும் குழையொலி கேட்டு

அக‌த்திய‌ வாடை உயிருள் ஊர்த்து

அக‌ம் நெளிந்த‌தை ஈங்கெழுதுகின்றேன்

.
பிய்ந்தும் அமிழ்ந்தும் எஞ்சிய‌பின்னே

பிற‌ந்த‌து ஆழியின் ம‌லை

கல்லொடு பொருது புல்லொடு பெயர்த்து

தண்டுளி விழுது இழிதந்தாங்கு

வெண்படல் விரித்து குணில் பாயருவி

ஊர்ந்து ஊர்ந்து காயல் தழுவும்

.
விரிமணல் வரியில் அலவன் எழுதும்

சுவடுகள் சிதைய கால் தெற்றி நடந்தேன்

நுரையில் மாலை திரைகள் தொடுக்க‌

நுவலும் கடற்குரல் பண்ணும் ஒலிக்க‌

இளங்கட்செல்வன் பசுங்கதிர் அளைஇ

பொறிப்பூம் புள்ளினம் கோடுகள் தீற்றும்

வெறிவளர் தீ எழில் கிழக்கினில் மூள‌

நடந்தவன் நின்றேன் திடுக்கிட்டு குனிந்தேன்

கால்விரல் கவ்விய வெண்குருகொன்று

மிளகுக்கண்ணில் குறு குறு விழித்து

அஞ்சிறை கொண்டு அகல மூடி

நீள்க‌ழுத்து உள் புதைத்து நிற்கும்

.
கூஉய்த் த‌ந்த‌ குறுக்கீற்று ஒலியில்

கூதிர் நனைத்த பனிக்குள் விறைக்கும்

.
கைபொத்தி ஏந்தி குருகினை நோக்கி

கூர்விழி வீசி நுண்மொழி யாற்றினேன்

.
கடற்புள்ளே!கூறிடு படு துயர்.

மடல் கூனல் தடவிய மணற்கரையோரம்

எக்கர் ஞாழல் விரவிய விரிப்பில்

குருகும் ஆங்கு சிறுகப்பறந்து

உருகும் காலைப்போழ்தையும் உருக்கி

வெள்ளி வார்க்கும் அணி மணல் ஊடி

அலகு பிளந்து அழகு தமிழ் பேச

உச்சி உறைந்து ம‌லையா நின்று

உகுக்கும் சொல்லின் தொகுத்த‌ல் கேட்டேன்"

"ப‌ஃறுளி யாறும் ப‌ன்ம‌லை அடுக்க‌மும்

கும‌ரிக்குள்ளே வீழ்திடும் காலை குல‌விக்கிட‌ந்தேன்

பெடையொடு ந‌ச்சி பெட்ப‌ம் கொண்டு

பாச‌டை மூசிய‌ வ‌ண்டின‌ம் ஆர்ப்ப‌

குட‌ந்தைக‌ள் கொண்டு குழுவின‌ம் சேர்த்து

களி ம‌ண்டிய‌ க‌னை குர‌ல் கூட்டி

துஞ்சிய இன்ப‌ம் தொலைய‌ த‌ந்து

விஞ்சினேன் இன்று

ஆயிர‌ம் ஆயிர‌ம் யாண்டுக‌ள் க‌ழிந்த‌

அரும்பெரும் குருகாய்

அலையிடை அலையாய்

அலைந்திட‌க்கிட‌ந்தேன்

.அளியேன் யானே!"

==============================================27.02.2010

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக